திருவனந்தபுரம், நவ. 7- பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு பிரிவு ஊடகங் களுக்கு தடை விதித்துள்ள ஆளுநரின் முடிவு ஜனநாயக விரோதமானது என்று கேரள பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கேரள பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.வி.வினிதா மற்றும் பொதுச் செய லாளர் ஆர்.கிரண்பாபு ஆகியோர், அரசியல் சாசனப் பதவியான ஆளுநர் பதவியின் கண்ணியத்தை ஆரிப் முகமது கான் மதிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். ஊடக சுதந்திரத்தின் மீதான இந்த அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாயன்று (நவ.8) காலை 11.30 மணிக்கு ஆளுனர் நோக்கி பேரணி நடத்தப்படவுள்ளது. கைரளி மற்றும் மீடியா ஒன் செய்தியாளர்களை ஆளுநரின் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்க அனுமதிக்காததை யடுத்து, அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு அரங்கில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டனர்.இது திட்டமிட்டு ஊடகவியலாளர்களை அவமதிக்கும் முயற்சியாகும். ஜெய்ஹிந்த் தொலைக்காட்சியின் செய்தியாளர் இந்த சந்திப்பில் பங்கேற்க அனுமதி கேட்டு மெயில் அனுப்பியிருந்தும் அனுமதி வழங்கப்படவில்லை. சகிப்பின்மை மற்றும் ஜனநாயக விரோத போக்கை ஆளுநர் திரும்ப திரும்ப மேற்கொண்டு வருகிறார். கடந்த முறை ஆளுநர் சில ஊடகங்களுக்கு தடை விதித்த போது இது மீண்டும் தொடரும் பட்சத்தில், கடும் போராட்டத்திற்கு செல்ல நேரிடும் என கேரள பத்திரிகையாளர் சங்கம் எச்சரித்திருந்தது.
கைரளியில் கறுப்புப் பட்டை
கைரளி செய்தியாளரை ஆளுநர் அவமதித்ததை கண்டித்து செய்தி வாசிப்பாளர்கள் உட்பட கைரளியின் அனைத்து ஊழியர்களும் கறுப்புப் பட்டை அணிந்து வேலை செய்தனர்.