states

img

ஹிஜாப் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் வெளியாட்களே- உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தில் ஏற்பட்ட கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் வெளியாட்களே என அம்மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப், பர்தா , புர்கா அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்குஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால், 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர்.
கடந்த வாரத்தில் மங்களூரு, குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி, சிக்கமகளூரு உள்ளிட்ட இடங்களிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். இதனால் மாணவிகள் 6ம் நாளாக நேற்றும் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதை கண்டித்து ஏபிவிபி மாணவ அமைப்பினர் காவி துண்டு அணிந்து 'ஜெய் ஸ்ரீராம் முழக்கம் எழுப்பினர். இதனை கண்டித்து பாபா சாகேப் அம்பேத்கர் மாணவர் அமைப்பினர் நீல துண்டு அணிந்து 'ஜெய் பீம்'என முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலோர கர்நாடகாவில் தொடங்கிய இந்த போராட்டம் நேற்று பாகல்கோட்டை, ஹாசன், மண்டியா, கோலார் ஆகிய மாவட்டங்களிலும் பரவியது. ஷிமோகாவில் உள்ள பாபுஜி நகரில் ஏபிவிபி மாணவ அமைப்பினர் முஸ்லிம் மாணவிகளை சுற்றிவளைத்து 'ஜெய் ராம்' என முழக்கம் எழுப்பினர். மேலும் தேசிய கொடி கட்டும் கம்பத்தில் ஏறி, காவிக் கொடியை கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவ அமைப்பினர் கல்வீச்சிலும் ஈடுபட்டதால் கல்லூரி நிர்வாகம் கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. இதனால் போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அங்கு பதற்றம் நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு மாநிலத்தில் உள்ள‌ அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் கூறியதாவது:
“தேவையில்லாத பிரச்னைகள் எங்கு நடந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று நடந்த கலவரம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிலரை கைதும் செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் வெளியாட்களே; மாணவர்கள் இல்லை. விசாரணைக்கு பின் மற்ற விவரங்கள் தெரிவிக்கப்படும்.
நீதிமன்றத்தின் உத்தரவிற்காக மாநில அரசு காத்திருக்கிறது. நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்றார்.”