இலங்கையின் மின்சார உற்பத்தி திட்டத்தை அதானி நிறுவனத்துக்கு மோடி கொடுக்க சொன்னதாக, அந்நாட்டு மின்சார வாரியத்தின் தலைவர் கூறினார். தற்போது டுவிட்டரில் modimustresign என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
இலங்கையின் மின்சார சட்டத்தின்படி பெரிய மின் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றால், அதற்கு முறையாக டெண்டர் விடப்பட வேண்டும் என்ற சட்டத்தில் அந்நாட்டு அரசு மாற்றம் செய்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் இலங்கை பொதுஜன கட்சியின் சார்பில் மின்சார சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட திருத்தம்படி, புதிய மின் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வசதியாக, எவ்வளவு பெரிய திட்டமாக இருந்தாலும் முறையான டெண்டர் விட வேண்டியது அவசியமில்லை. மாறாக ஆளும் அரசு யாருக்கு டெண்டர் கொடுக்க நினைக்கிறதோ, அவர்களுக்கு கொடுக்கலாம். இந்த சட்ட திருத்தத்திற்கு 120 எம்பிக்கள் ஆதரவாக வாக்களித்தனர். எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்த சட்ட திருத்தத்தை கடுமையாக எதிர்த்தது. சட்ட திருத்தத்திற்கு எதிராக 36 எம்பிக்கள் வாக்களித்தனர். பிரபல இந்திய தொழிலபதிபர் அதானி நிறுவனத்துடன் மின்சார ஒப்பந்தத்தை மேற்கொள்ள வசதியாக, மின்சார சட்டம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டி உள்ளது.
இந்நிலையில் இலங்கை மின்சார வாரியத்தின் தலைவர் பெர்டினான்டோ, இவ்விவகாரம் குறித்து இலங்கை மின்சார வாரியத்தின் நாடாளுமன்றக் குழுவிடம் கூறுகையில், ‘அதானி நிறுவனத்துடன் கடந்தாண்டு 500 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இலங்கையின் வடகிழக்கு பகுதியில் இந்த மின்சார உற்பத்தி திட்டம் அமைய உள்ளது. இந்த ஒப்பந்தத்தை அதானியிடம் கொடுக்கும்படி அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம், இந்திய பிரதமர் மோடி தெரிவித்ததாக, என்னிடம் அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்தார்’ என்று கூறினார்.
அதாவது பிரதமர் மோடியின் வற்புறுத்தலின் பேரில், மின்சார ஒப்பந்தம் அதானி குழுமத்திடம் கொடுத்ததாக கூறப்படும் விவகாரத்தை, அதிபர் கோத்தபய ராஜபக்சே மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை. தவறான தகவல் பரப்பப்படுகிறது’ என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் இந்தியாவிலும், இலங்கையிலும் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில், இலங்கை மின்சார வாரியத்தின் தலைவர் பெர்டினான்டோ, தான் கூறிய கருத்தை திரும்ப பெறுவதாகவும், தவறுதலாக அவ்வாறு கூறிவிட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று இந்திய அளவில் Modimustresign என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.