திறந்த வெளியில் முஸ்லிம்கள் தொழுகை செய்வது சகித்துக்கொள்ள முடியாது என அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம், குர்கான் நகரில் தொழுகை நடத்துவதற்காக 2018 ஆம் ஆண்டே இந்து மற்றும் முஸ்லிம்கள் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. சில நாட்களாக வலதுசாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம்கள் தொழுகை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து சீக்கிய மதத்தினர் தங்களின் கோயில்களில் முஸ்லிம்கள் தொழுகை செய்து கொள்ளலாம் என அறிவித்தனர்.
இது குறித்து முதல்வர் மனோகர் லால் கட்டார்," திறந்த வெளியில் முஸ்லிம்கள் தொழுகை செய்வது சகித்துக்கொள்ள முடியாது. விரைவில் இதற்கு சுமுக தீர்வு எட்டப்படும். முஸ்லிம்கள் வீட்டிலோ அல்லது அவர்களது வழிபாட்டுத் தலங்களிலேயே தொழுகை செய்யலாம் என தெரிவித்துள்ளார்”. முதல்வரின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு முஸ்லீம் அமைப்புகள் முதல் பலரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு மாநில முதல்வரே முஸ்லிம்களுக்கு எதிராக பேசியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.