ஹரித்துவார்:
உத்தரப் பிரதேசம், பீகார் மாநில கங்கையாற்றில் பிணங்கள் மிதந்த சம்பவங்கள் கடந்தஇரு வாரங்களுக்கு முன்பு, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.கொரோனா தொற்றால் சுடுகாடுகள் நிரம்பிவழிந்த நிலையில், எரிப்பதற்கு இடம் கிடைக்காதவர்களும், இறுதிச் சடங்கு செய்வதற்கு போதியபணவசதி இல்லாதவர்களும், இறந்துபோன தங்களின் உறவினர்களை, இப்படி ஆற்றில் தூக்கி வீசியதாக செய்திகள் வெளியாகின.
இப்படி மிதந்து வந்த பிணங்கள், உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி கங்கையாற்றிலும், உ.பி.- பீகாரை ஒட்டியுள்ள சவுஸா நகர கங்கையாற்றிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மீட்கப்பட்டன. கங்கை ஆற்றின் கரையிலும்அரைகுறையாக புதைக்கப்பட்ட நூற்றுக்கணக் கான பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. யமுனையிலும் இதேபோல பிணங்கள் மிதந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில்தான், உத்தரகண்ட் மாநிலம் பிதோராகர் மாவட்டத்தில் சரயூ நதிக்கரையிலும் பிணங்கள் கரை ஒதுங்கியிருப்பது, புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிணங்கள் கொரோனா தொற்றால் இறந்தவர்களாக இருக்கும் என்று உள்ளூர் மக்கள் அதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.பிதோராகர் நகரத்துக்கே சரயூ நதியில் இருந்துதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது என்பதால், அது மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.