ராஜஸ்தானில் பேருந்தும் டிராக்டரும் மோதி கொண்ட விபத்தில் குழந்தைகள் உட்பட 21 பேர் காயமடைந்தனர்.
குஜராத்தின் ராஜ்கோட்டிலிருந்து உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூருக்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ராஜஸ்தான் மாநிலம் பாரான் மாவட்டத்தில் என்.எச்-27 நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது, தவறான பக்கத்திலிருந்து வந்த டிராக்டர் பேருந்து மீது மோதியது.
மோதலை தவிர்க்கும் முயற்சியில் பேருந்து ஓட்டுனர் அங்குள்ள டிவைடரில் மோதியதால் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 வயது குழந்தை உட்பட 21 பயணிகள் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறை மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த பயணிகளை மீட்டு பாரான் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்தில் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்ததாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் பாரானின் உதவி காவல் கண்காணிப்பாளர் விஜய் ஸ்வர்ங்கர் கூறினார்.