states

img

கேரளாவில் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நியமனம்!  

கேரளாவில் சர்வதேச மகளிர் தினத்தன்று முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக தீபாமோல் என்ற பெண்மனி நியமிக்கப்பட்டுள்ளார்.  

ஒவ்வொரு வருடமும் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 2022 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இந்தியா முழுவதும் பல சிறப்பு கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் புதுச்சேரியில் ஒரு நாள் காவல்துறை கண்காணிப்பாளர்களாக கல்லூரி பெண், மெட்ரோ ரயிலில் இலவசப் பயணம், சுற்றுலா தலங்களில் இலவச அனுமதியும் அளித்து வருகின்றனர்.  

அதன்தொடர்ச்சியாக இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடபடுவதை ஒட்டி கேரளாவின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக தீபாமோல் தனது பணியை தொடங்கினார். அதனைதொடர்ந்து அவரிடம் ஆம்புலன்சின் சாவியை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வழங்கி கௌரவித்தார்.  இவர் கேரள மாநிலம் சுகாதாரத்துறையின் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை திட்டம் - கனிவ் 108 கீழ் தீபாமோல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

தீபாமோல் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த கைதேர்ந்த ஓட்டுநர் ஆவார். இவர் பல வருடங்களாக பல்வேறு வாகனங்களை ஓட்டிய அனுபவம் வாய்ந்தவர். மேலும் இவர் 2008ல் ஓட்டுநர் உரிமம் பெற்று 2009ல் கனரக வாகனங்களை ஓட்ட உரிமம் பெற்றார். சிறிய ஓட்டுநர் பள்ளியையும் நடத்தி வருகிறார். 2021 ஆம் ஆண்டில், அவர் தனது இருசக்கர வாகனத்தில் கோட்டயத்திலிருந்து லடாக் வரை 16 நாட்களில் சென்று சாதனை படைத்தவர். திருச்சூரில் நடைபெற்ற ஆஃப்-ரோட் டிரைவிங் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், பெண்கள் அனைத்து துறைகளிலும் ஈடுபட வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு, ஆர்வமுடைய பெண்களை நியமிக்க அரசு முயற்சி எடுத்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பெண்கள் மீது காலங்காலமாக இருந்து வரும் கருத்துக்களை உடைக்க  முடியும்.

மேலும் பெண்கள் தாங்கள் விரும்பும் துறைகளில் ஈடுபட உதவும் நோக்கில் இந்த முயற்சி அமைந்துள்ளது. தீபாமோல் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.