states

img

இஸ்லாமியர்களின் உணவகங்கள் குறித்து சர்ச்சை கருத்து: கேரள முன்னாள் எம்எல்ஏ ஜார்ஜை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

கேரளத்தில் கடந்த மாதம் நடைபெற்ற இந்து மகாசங்கத்தில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் மூத்த அரசியல்வாதியும் கேரள சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான பி.சி ஜார்ஜை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கத் திருவனந்தபுரத்தில் உள்ள கீழமை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜார்ஜுக்கு வழங்கப்பட்ட பிணையை திருவனந்தபுரத்தில் உள்ள ஜூடிசியல் முதல் வகுப்பு நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, கேரள காங்கிரஸ் என்ற மாநில கிறிஸ்தவக் கட்சியின் மூத்த தலைவரான ஜார்ஜை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜார்ஜை பாஜகவினர் வரவேற்றனர் .

பிணை நிபந்தனைகளை ஜார்ஜ் மீறியதாக அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, அவரின் ஜாமீனை திருவனந்தபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ரத்து செய்தது.

முன்னதாக, இஸ்லாமியர்கள் நடத்தும் உணவகங்களில் பரிமாறப்படும் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது என்றும் இதனால் இஸ்லாமியர் அல்லாத சமூகத்தின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றச் சதி செய்யப்படுகிறது என்று பி.சி. ஜார்ஜ் தெரிவித்திருந்தார்.

இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. அவர்கள் குடும்ப கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கின்றனர். ஆனால், இஸ்லாமியப் பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்குப் போட்டியாக இந்து, கிறிஸ்தவ பெண்கள் குறைந்தது 4 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய மத போதகர்கள் 3 முறை எச்சில் துப்பிய உணவு வகைகளே மற்ற மக்களுக்குப் பரிமாறப்படுகிறது. அவர்கள் துப்பிய உணவு வகைகளை நாம் ஏன் சாப்பிட வேண்டும். அவற்றைப் புறக்கணிக்க வேண்டும். இந்தியாவை இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என்று பி.சி.ஜார்ஜ் தெரிவிந்திருந்தது நினைவுகூரத்தக்கது.