states

img

ஹிஜாப் விவகாரம்: கர்நாடகாவில் பிப்.16 ஆம் தேதிவரை கல்லூரிகள் மூடல்  

ஹிஜாப் சர்ச்சையை முன்னிட்டு இன்று முதல் பிப்.16 ஆம் தேதிவரை 11, 12 வகுப்புகள் மற்றும் கல்லூரிகளை மூட கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.  

கா்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம், குந்தாபுராவில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிய பள்ளி நிா்வாகம் தடை விதித்தது. அதனை மீறி ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் 6 பேரை கல்லூரியிலிருந்து கல்லூரி முதல்வா் வெளியேற்றினாா். இதனால் கல்லூரி வளாகத்துக்கு வெளியே இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைதொடர்ந்து இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால் நாங்களும் காவித்துண்டு அணிந்து வருவோம் என சங்-பரிவார மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.      

இதன் காரணமாக கா்நாடகத்தில் உள்ள உயா்நிலைப் மேல்நிலை பள்ளிகள் அனைத்துக்கும் பிப். 9 ஆம் தேதிமுதல் 11 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து கா்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது.  

இந்நிலையில் ஹிஜாப் சர்ச்சையை முன்னிட்டு இன்று முதல் பிப்.16 ஆம் தேதிவரை 11, 12 வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றை தொடர்ந்து மூடி வைக்க கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  

மேலும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் எனவும் கல்வி நிலையங்கள் ஆன்லைன் வாயிலாக வகுப்புகளை நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.