தோழர் பிருந்தா காரத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தில்லி மாநில செயலாளர் கே.எம்.திவாரியுடன் சேர்ந்து, கீழ்க்கண்ட கடிதத்தை டெல்லி காவல் ஆணையருக்கு ஜஹாங்கிர்புரி வன்முறை குறித்து எழுதியுள்ளார்.
திரு அஸ்தானா அவர்களுக்கு, வணக்கம்!
ஏப்ரல் 16 ஆம் தேதி, ஜஹாங்கிர்புரியில் நடந்த வகுப்புவாத வன்முறை சம்பவங்களில், காவல்துறையின் பங்கு தொடர்பாக நாங்கள் இந்த கடிதத்தை எழுதுகிறோம்.
பஜ்ரங் தளத்தின் இளைஞர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஊர்வலத்தில் வாள்கள், லத்திகளோடு கூடவே அதிர்ச்சியூட்டும் வகையில் துப்பாக்கிகள் ஏந்தி ஆயுதபாணியாக இருந்ததை, பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ ஆதாரங்களும், உண்மை அறிவதற்காக சென்ற எங்கள் உண்மை கண்டறியும் குழு சேகரித்த சாட்சி அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.
ஊர்வலத்தின் போது ஆயுதங்கள் வெளிப்படையாக எடுத்துச்செல்லப்பட்டன. ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதியும் தரப்பட்டுள்ளதை காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆயுதங்களை எடுத்துச் செல்ல காவல்துறை அனுமதி அளித்ததா? உண்மையில் ஆயுதங்களை ஏந்திய ஊர்வலக்காரர்களுக்கு, ஆயுதச் சட்டத்தின் அடிப்படையில், கடுமையான தண்டனைகள் வழங்க முடியும். ஊடகங்களுக்கு நீங்கள் அளித்த அறிக்கையிலிருந்து, ஊர்வலத்தில் ஆயுதம் ஏந்திய நபர்களை அடையாளம் கண்டுள்ளீர்களா, அப்படியானால் ஆயுதச் சட்டம் உள்ளிட்ட சட்ட விதிகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டார்களா என்பது தெளிவாகவில்லை. காவலர்களின் பங்கு பற்றி ஏதேனும் விசாரணை நடைபெறுகிறதா என்பதும் உங்கள் அறிக்கையிலிருந்து தெளிவாகத் தெரியவில்லை. நோன்பு துறக்கப் பிரார்த்தனைகள் தொடங்கவிருந்த நேரத்தில், ஆத்திரமூட்டும் ஆக்ரோஷமான கோஷங்களை எழுப்பியபடி, மசூதியின் முன் ஆயுதம் ஏந்திய ஊர்வலம் செல்ல அனுமதித்ததற்கு யார் பொறுப்பு? காவல்துறை வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் நடந்துகொண்டதன் விளைவாகத்தான் இவை அனைத்துமே தொடங்கின.
சில காவலர்கள் பணியின் போது காயம் அடைந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. எனினும் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குவதற்கு முன்னர் கட்டுப்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகள் போதிய கவனம் செலுத்தியிருந்தால், போதுமான போலீஸ் நிறுத்தப்பட்டு இருந்தால், ஆயுதம் ஏந்தியதற்காக ஊர்வலக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், மசூதி முன் ஊர்வலத்தை நிறுத்த அனுமதிக்காமல் இருந்திருந்தால் - மோசமான சம்பவங்கள் நடந்திருக்காது.
இதற்கு முன்னர் இந்தப் பகுதியில் வகுப்புவாத இயல்புடைய சம்பவங்கள் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்ந்துள்ளனர். ஷோபா யாத்ரா என்ற பெயரில் ஊர்வலத்தில் வந்த வெளியாட்களால் இந்த நிகழ்வுகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டன என்பதற்கு இது மேலும் ஒரு சான்றாகும்.
இரவு நேரத்தில், சி பிளாக்கில் அமைந்துள்ள வீடுகளில் புகுந்த ஆண் போலீசார் பெண்களை சரமாரியாக தாக்கியதாகவும் எங்களுக்கு தெரிய வந்துள்ளது.
ஆண் காவலர்கள் ஒரு பெண்ணைத் தொடக்கூடாது எனக் கூறும் அனைத்து விதிகளுக்கும் இது எதிரானது. மேலும், கடந்த 17ம் தேதி, ஜஹாங்கிர்புரி காவல் நிலையத்தில் கூடுதல் டிஜிபி ஸ்ரீ கிஷன் குமாரை எங்கள் உறுப்பினர்கள் மற்றவர்களுடன் சந்தித்தபோது, தானா வளாகத்தில் பாஜக தலைவர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்திக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது ஒழுங்கீனமானது, தற்போதைய வழக்கிற்கு முற்றிலும் பாரபட்சமான, ஒருபக்கச் சார்பானது. இந்த நிகழ்வில் காவல்துறையின் பங்கு பற்றிய அச்சத்தை வலுப்படுத்துகிறது.
இந்த கடிதத்தின் மூலம் உங்களுக்கு வைக்கும் வேண்டுகோள்
1) ஆயுதம் ஏந்தி ஊர்வலம் செல்ல அனுமதித்த (2) போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்மைக்கு காரணமான (3) மசூதிக்கு முன்பாக ஊர்வலத்தை நிறுத்த அனுமதித்த 4) ஒரு பக்க சார்பு விசாரணையை நடத்தும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
தாங்கள் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளீர்கள். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்பதை ஆதரிக்கிறோம். காவல்துறையால் அதிக எண்ணிக்கையில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மேற்சொன்ன சம்பவங்களுக்கு முக்கிய காரணமான, ஆத்திரமூட்டல் செய்த ஊர்வலத்தை திட்டமிட்டு நடத்தியது பஜ்ரங் தள் அமைப்பின் துணை அமைப்பே என்பதையே நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
வழக்கின் விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ள குற்றப்பிரிவு, ஜஹாங்கிர்புரி சம்பவத்தில் பொறுப்பான காவல் நிலைய அதிகார வரம்பிற்கு உட்பட்டது ஆகும். எனவேதான், குறித்த காலம் நிர்ணயித்து, பாரபட்சம் இல்லாத நீதி விசாரணை விசாரணை வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. இதற்கிடையில், மேற்சொன்ன சம்பவத்திற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.