மக்களவையில் தில்லி அவசர சட்ட மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணிக்கு மக்களவை கூடியவுடன் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் தில்லி அவசர சட்ட மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் மக்களவை தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரி , திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.
தில்லியில் அரசு நிர்வாகம் தொடர்புடைய பல்வேறு விவகாரங்களில் ஆம் ஆத்மி அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வந்தது.
இந்நிலையில், தில்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் அதிகாரம் என்றும் தில்லியில் சட்டமியற்றும் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்ட பகுதிகளைத் தவிர சேவை நிர்வாகத்தில் நிர்வாகத்தின்மீது சட்டமன்றத்துக்கே அதிகாரம் உள்ளது என்றும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு கூறிவிட்டது.
மேலும், பொது ஒழுங்கு, காவல் மற்றும் நிலம் தொடர்பான அதிகாரங்கள் தில்லி அரசின் கட்டுப்பாட்டுக்கு வெளியே உள்ளன என நீதிமன்றம் கூறியுள்ளது.ஆளுநரை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசாங்கத்தை செயல்படவிடாமல் தடுத்துக் கொண்டிருந்த மோடி அரசாங்கத்திற்கு இந்த தீர்ப்பு மிகப்பெரிய அடியாக விழுந்தது.அதை பொறுத்துக் கொள்ளாத மோடி அரசு உடனடியாக உச்சநீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யும் விதமாக அவசர சட்டம் ஒன்றை உருவாக்கி தற்போது அந்த அவசர சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது