மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள எட்டு கட்டத் தேர்தலில் நான்காவது கட்டமாக நடைபெறும் இன்றைய (சனிக்கிழமை) தேர்தலில் துணை பாதுகாப்புப் படையினரால் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கூச் பிகார் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. எனினும் இந்த சம்பவத்தில் ஐந்துபேர் கொல்லப்பட்டதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கூறுகிறது. சம்பவம் நடந்த வாக்குச்சாவடியில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், சம்பவம் குறித்து அறிக்கை கோரி இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.
இன்றைய தினம் கூச்பிகார் மற்றும் அலிபுர்துவார் மாவட்டங்களிலும் மற்றும் தெற்கு 24 பர்கானாவில் ஒரு பகுதி, ஹவுரா, ஹூக்ளி உட்பட மொத்தம் 44 இடங்களுக்குத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ, மாநில அமைச்சர்கள் பார்த்தா சாட்டர்ஜி, அருப் பிஸ்வாஸ் உட்பட 373 வேட்பாளர்கள் இன்று போட்டியிடுகிறார்கள்.
இன்றையதினம் நடைபெறும் தேர்தலில் 290 மூன்றாம் பாலினத்தவர் உட்பட 1 கோடியே 15 லட்சம் பேர் வாக்களிக்கிறார்கள்.
சீத்தாராம் யெச்சூரி
இந்தக் கொடிய சம்பவம் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: ஒட்டுமொத்தத்தில் கண்டிக்கத்தக்கதாகும். தேர்தல் ஆணையம் நீதித்துறையின் மேற்பார்வையுடன் உயர்மட்ட அளவில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், குற்றமிழைத்தவர்களைத் தண்டித்திட வேண்டும்.
பாதிப்புக்கு உள்ளாகித் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கள்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.