இம்பால், ஜூன் 30 - மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை 2-ஆவது நாளாக அவர்கள் தங்கியுள்ள முகாம்களுக்கே நேரில் சென்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். முதல்நாளில், வன்முறையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட சூரசந்த்பூரில், சுமார் 200 போ் தங்கவைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமிற்கு சென்ற ராகுல் காந்தி, அங்கிருந்த மக்களுடன் கலந்துரையாடினார். குழந்தைகளுடன் அமர்ந்து மதிய உணவைப் பகிர்ந்து கொண்டார். வெள்ளிக்கிழமையன்று மொய்ராங் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர், இம்பாலில் உள்ள சிந்தனையாளர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, 10 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி னார். இம்பாலில் மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவையும் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். இதன்பின் செய்தி யாளர்களிடம் பேட்டியளித்த ராகுல் காந்தி, “மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டும். அமைதிதான் இங்கே தேவையான ஒன்றாக இருக்கிறது” என்று குறிப்பிட்டார். மேலும், இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட அவர், “மணிப்பூரில் வன்முறை யால் அன்புக்குரியவர்கள் மற்றும் வீடுகளை இழந்தவர்களின் நிலையைப் பார்ப்பது மற்றும் அவர்களின் அழுகுரல் கேட்பது மனவேதனை அளிக்கிறது. இதயம் நொறுங்கி விட்டது. நான் சந்தித்த ஒவ்வொரு சகோதர, சகோதரி மற்றும் குழந்தைகளின் முகத்திலும் உதவிக்கான கூக்குரல் உள்ளது. நமது மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மணிப்பூருக்கு இப்போது மிக முக்கிய மாக அமைதி தேவை. நம் முயற்சிகள் அனைத்தும் அந்த இலக்கை நோக்கி ஒன்றுபட வேண்டும்” என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார்.