பெங்களூரு,பிப்.15- கர்நாடகாவில் பல மாவட்டங்களில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு வகுப்புக்குச் செல்ல பள்ளி நிர்வாகங்கள் அனுமதி மறுத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் செவ்வாய்க்கிழமையன்று திறக்கப்பட்டன.இதில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. ஹிஜாப்பை நீக்கிய பிறகே மாணவிகள் பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர். மாண்டியாவில் ரோட்ரி சோசைட்டி பள்ளியில் புர்கா அணிந்து வந்த ஆசிரியர்களும், புர்காவை நீக்கிய பிறகே பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர். குடகு மாவட்டத்தில் 30-க்கும் அதிகமான மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்காக திருப்பி அனுப்பப்பட்டனர். ஹிஜாப் அணிந்து வந்ததற்காக திருப்பி அனுப்பப்பட்ட பள்ளி மாணவி ஹினா கவுசர் கூறுகையில், “நான் பள்ளிக்கு செல்ல ஹிஜாப் அணியாமல் இருக்க வேண்டும் என்று கூறினார்கள். என்னால் அது முடியாது. அதனால் பள்ளிக்கு செல்லவில்லை” என்றார். கர்நாடகாவில் பள்ளி, கல்லூரி களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உடுப்பியைச் சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் 3 பேர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.