states

img

அம்பேத்கர் எழுத்துக்கள் தாமதமின்றி தமிழில் வெளி வர வேண்டும் -சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்

அம்பேத்கர் எழுத்துக்கள் தாமதமின்றி தமிழில் வெளி வர வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தி உள்ளார்.  இதுதொடர்பாக  ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் அவர்களை நேரில் சந்தித்து வழங்கிய கடித விபரம் பின்வருமாறு.

அம்பேத்காரின் எழுத்துக்கள் மற்றும் உரைகளின் தொகுப்புகள் எண் 1 முதல் 37 வரை, புதிய தொகுப்பு எண் 38, இன்னும் நிலுவையாய் உள்ள தொகுப்பு எண்கள் 39 மற்றும் 40 ஆகியன வெளி வருவதில் உள்ள தடைகளை அகற்ற வேண்டுமென்று கோரி இருக்கிறேன்.

பல மொழிகளில் இத் தொகுப்புகளை வெளிக் கொண்டுவர முன் முயற்சி எடுக்கப்பட்ட போது, தமிழுக்கான முழுமையான வணிக உரிமையை 70 ஆண்டு பாரம்பரியமும், நன் மதிப்பும் உடைய நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பெற்றது.

தொகுப்பு 1 - 25 களை வெளிக் கொண்டு வருவதில் டாக்டர் எஸ். பெருமாள் தலைமையிலான குழு இயங்கியது. பின்னர் சிறந்த எழுத்தாளரான திரு ரெங்கசாமி (மாஜினி) குழுவிற்கு தலைமையேற்று தொகுப்பு எண் 37 வரை வெளிக் கொண்டு வந்தது.

முதன் முதல் தொகுப்பு 1991 இல் மொழி பெயர்ப்பு பணி துவக்கப்பட்டு 1993 இல் வெளிக் கொணரப்பட்டது. எல்லாத் தொகுப்புகளும் 1993 - 2005 காலத்தில் வெளி வந்தது. சில தொகுப்புகள் 2008 மற்றும் 2010 அதற்கு இருந்த தேவையின் அடிப்படையில் வெளி வந்தன. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்காக சில தொகுப்புகள் அளிக்கப்பட்டன.

2010 க்கு பின்னர் எந்த தொகுப்பும் அச்சிடப்படவில்லை.

தற்போது அம்பேத்கர் தொகுப்புகளை வாசிப்பதற்கான தேடல் அதிகரித்துள்ள சூழலில் தேவை மிகுந்துள்ளது. பல அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள் ஆகியோரிடம் இருந்து முழு தொகுப்புகளுக்கு வேண்டுகோள்கள் வருகின்றன. ஆனால் மொத்தத் தொகுப்புகள் இன்று இருப்பில் இல்லை.

நான் பதிப்பகத்தாரிடம் விசாரித்ததில்

2011 இல் இருந்து மறு பதிப்புக்கான வேண்டுகோள்கள் பல முறை டாக்டர் அம்பேத்கர் பவுண்டேசனுக்கு அனுப்பப்பட்டும் பதில் வரவில்லை என அறிகிறேன்.

2018 இல் புதுச்சேரி அரசின் ஆதி திராவிட நலத் துறை, பாரத ரத்னா பாலா சாகேப் டாக்டர் அம்பேத்கர் விழாக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு எம்.காந்தி பிரகாஷ் 600 முழுத் தொகுப்புகளுக்கு (1 - 37) ஆர்டர்களை தந்தும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கைவசம் இருப்பு இல்லாததால் தர முடியவில்லை.

தற்போது பல மாவட்டங்களில் புத்தகத் திருவிழாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

அம்பேத்கார் எழுத்துக்கள் இளைய தலைமுறைக்கு கல்வியையும், விழிப்பையும் தரக் கூடியவை ஆகும். ஆகவே இந்த தடைகள் அகற்றப்பட்டு அம்பேத்கர் எழுத்துக்கள் தாமதமின்றி வெளி வர வேண்டும்.

தாங்கள் உடனடியாகத் தலையிட்டு அம்பேத்கர் பவுண்டேசனுக்கு அறிவுறுத்தி தாமதமின்றி முழுத் தொகுப்புகள் கிடைப்பதற்கு அனுமதியும், ஆதரவும் அளிப்பதை உறுதி செய்யுமாறு வேண்டுகிறேன்.

இக்கடிதத்தை அமைச்சரிடம் நேரில் வழங்கிய போது “இப்பிரச்சனை குறித்து உரிய முறையில் தலையிட்டு தீர்வு காணுகிறேன்” என்றார். அமைச்சரின் பதில் நம்பிக்கையளிப்பதாக இருந்தது.

;