states

பாஜக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் விக்டோரியா கௌரியை நீதிபதியாக்கக் கூடாது

சென்னை, பிப்.2- பாஜக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் விக்டோரியா கௌரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க 21 மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் சார்பில் 2023 ஜனவரி 17-ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள ஐந்து வழக்கறிஞர்கள் மற்றும் மூன்று நீதித்துறை அதிகாரிகளை நீதிபதிகளாக உயர்த்த பரிந்துரைத்து செய்தி அண்மையில் இணையதளத்தில் வெளியானது. இந்த 5 வழக்கறிஞர்களில் வேங்கடச்சாரி லட்சுமிநாராயணன், லெக்ஷ்மண சந்திர விக்டோரியா கௌரி, பிள்ளைபாக்கம் பாஹுகுடும்பி பாலாஜி, ராமசாமி நீலகண்டன் மற்றும் கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன. இதில், வழக்கறிஞர் விக்டோரியா கௌரி பாஜக மகளிரணியின் தேசிய செயலாளராக இருந்தவர். வெறுப்புணர்வை தூண்டும் வகையில் விக்டோரியா கௌரி பேசிய பேச்சுக்கள் யூடியூப் சேனல்களில் தற்போதும் உள்ளது.

அத்துடன் வெறும் 5 ஆண்டுகள் கூட அனுபவம் இல்லாதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில், பாஜக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் விக்டோரியா கௌரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க 21 மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விக்டோரியாவை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் அளித்த பரிந்துரையை நிராகரிக்கும்படி குடியரசுத் தலைவருக்கு மூத்த வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர். பாஜக நிர்வாகியாக இருந்த விக்டோரியா கௌரியை நீதிபதியாக்கும் பரிந்துரையை திரும்பப் பெறக் கோரி கொலிஜியத்துக்கும் என்.ஜி.ஆர்.பிரசாத், ஆர்.வைகை, மோகன், வி.சுரேஷ் உள்ளிட்ட 21 வழக்கறிஞர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.  பரிந்துரையை திரும்பப் பெறும்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியத்துக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.