பெங்களூர், மார்ச் 28 - கல்வி நிலையங்களில் ஹிஜாப்பிற்குத் தடை, திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்குத் தடை ஆகியவற்றைத் தொடர்ந்து, தற்போது மாவீரன் திப்பு சுல்தான் தொடர்பான பாடங்களை மாற்றி யமைக்கும் நடவடிக்கையிலும் கர்நாடக பாஜக அரசு இறங்கியுள்ளது. கர்நாடக பள்ளிகளில் உள்ள பாடப்புத்தகங்களில் மாற்றம் செய்வது தொடர்பாக, வலதுசாரி எழுத்தாள ரான ரோகித் சக்ரதீர்த்தா தலைமையில் கர்நாடக அரசு குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு, தனது அறிக்கையை கர்நாடக பள்ளிக் கல்வித்துறைக்கு தற்போது சமர்ப்பித்துள்ளது. அதில்தான், திப்பு சுல்தான் தொடர்பான பாடத்தை மாற்றியமைக்கும் பரிந்துரை வழங்கப்பட்டிருப்ப தாகவும், கர்நாடக பாஜக அரசும் அந்தப் பரிந்துரை யை விரைவில் அமலுக்கு கொண்டுவர உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பேட்டி அளித்துள்ள பள்ளி கல்வித் துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் “பாடப் புத்தகங் களில் மாற்றம் செய்வது தொடர்பான நிபுணர் குழு அறிக்கையை பெற்றுள்ளேன். அதனை ஆலோசித்து மாற்றங்கள் செய்யப்படும்’’ என்று சூசகமாக தெரி வித்துள்ளார்.
குழுவின் பிற பரிந்துரைகள் தொடர்பான விவரங்களை கூற அவர் மறுத்துவிட்டாலும், கல்வித் துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள் ளன. பதினெட்டாம் நூற்றாண்டில் மைசூரு வை ஆட்சி செய்த திப்பு சுல்தான் தொடர்பான பாடங் களில் அவரை புகழும் வகையில் உள்ள சில பகுதி களை மாற்ற அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளதை அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் வடகிழக்கு இந்தியாவை 600 ஆண்டு களாக ஆண்ட அஹோம் வம்சத்தினர் மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளை ஆண்ட கார்கோடா வம்சத்தினர் குறித்த பாடங்களை சேர்க்கவும், தென்னிந்தியாவின் அயோத்தி என்று அழைக்கப்படும் பாபா புடன்கிரி மற்றும் தத்தபீடம் குறித்த பாடங்கள், காஷ்மீர் வரலாறு உள்ளிட்டவற்றை பாடங்களாக சேர்க்க பரிந்துரைகள் வந்திருப்பதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். இதனிடையே, பாஜக அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏ-வுமான யு.டி. காதர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “திப்புசுல்தான் தொடர்பான பாடங்களை புத்தகத்தில் இருந்து நீக்குவது பற்றி ஊடகங்கள் அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.
அதே நேரம் திப்பு சுல்தான் தொடர்பான எந்த குறிப்பை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கினாலும் உண்மையை மறைக்க முடியாது. லண்டன் அருங்காட்சியம், ஸ்ரீரங்கப்பட்டணா, தேவனஹள்ளி இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போது திப்பு சுல்தான் பெருமை நினைவுகூரப்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். முன்பு, கொரோனா காலத்தில் மாணவர்களின் பாடத்திட்டங்கள் குறைக்கும் முடிவெடுக்கும்போதும், கர்நாடக பாஜக அரசு முதலில் கை வைத்தது, 7-ஆம் வகுப்பு புத்தகத்தில் இருந்த திப்பு சுல்தான் தொடர்பான பாடத்தைதான். அந்தப் பாடம் அப்போது கைவிடப் பட்டது. எனினும் 6 மற்றும் 10-ஆம் வகுப்பு பாடப்புத்தகங் களில் அவை இருந்தன. தற்போது அவற்றுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசு, பாடநூல் கழகம், நிபுணர் குழு அனு மதி அளிக்கும் பட்சத்தில் பகவத் கீதை பள்ளிகளில் பாடமாக சேர்க்கப்படும் என்று கர்நாடக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் அண்மையில் கூறியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.