‘‘விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; தேசத்தின் அடையாளமாகும். அத்தகைய விளையாட்டின் மாண்பைக் கெடுக்கும் வகையில் ‘‘மேட்ச் பிக்சிங்’’ என்கிற ஒற்றைச் சொல் சிறந்த விளையாட்டு வீரரின் வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக சூறையாடி விடுகிறது’’.
‘‘ஸ்பாட் மேட்ச் பிக்சிங்’’
30 ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட்டில் நுழைந்த இந்த சூதாட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியின் தலைசிறந்த முன்னாள் கேப்டன் ஹன்சி குரோனி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், மனோஜ் பிரபாகர், அஜய் ஜடேஜா, அஜய் சர்மா போன்ற மூத்த வீரர்கள் சிக்கி சீரழிந்தனர். ‘‘ஸ்பாட் மேட்ச் பிக்சிங்’’ என்று புது வடிவம் எடுத்த சூதாட்டத்தில் ஐபிஎல்லில் முதன்மை அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் தண்டனை பெற்றார். இதேபோல், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், ஐபிஎல் தொடரில் விளையாடிய சுதிந்திரா, சலாப் ஸ்ரீவத்சவா, மோனிஷ் மிஸ்ரா, அமித் யாதவ், அபினவ் பாலி, பாகிஸ்தான் வீரர்கள் சலீம் மாலிக், அப்துல் ரகுமான், தென்னாப்பிரிக்காவின் கிப்ஸ், இலங்கையின் ஜெயசூர்யா, இளம் வீரர் தில் ஹாரா, ஐக்கிய அமீரக வீரர்கள் முகமது நவீத், சைமன் அன்வர் உள்ளிட்டோரும் சிக்கி தண்டனை அனுபவித்து வருகின்றனர். டென்னிஸிலும் நுழைந்த பிக்சிங்... கிரிக்கெட்டில் தொடங்கிய மேட்ச் பிக்சிங், டென்னிஸ் விளையாட்டையும் விட்டுவைக்கவில்லை. இது போன்ற நிகழ்வுகள் விளையாட்டு மீதும், வீரர்கள் மீதும் ரசிகர்களும் பொது மக்களும் வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைத்து வருகிறது. இந்தப் பின்னணியில், இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்களின் தேர்வு வெளிப்படையாக இல்லை என்று நீதிமன்றம் வரைக்கும் சென்றிருக்கும் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பெரும் புயலை கிளப்பியிருக்கிறது.
என்னதான் புகார்?
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை தேர்வு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தோகாவில் நடைபெற்றது. இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான மணிகாவை எதிர்த்து களமிறக்கப்பட்ட சுகிர்தா முகர்ஜி வெற்றி பெற்றார். தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்தாலும் புள்ளிகள் அடிப்படையில் மணிகாவும் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றார். இந்நிலையில், ஒலிம்பிக்கில் விளையாடியபோது தேசிய பயிற்சியாளரிடம் மணிகா ஆலோசனை பெற மறுத்துவிட்டார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்காக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம், ஆசிய சாம்பியன் போட்டிக்கான அணியில் மணிகாவை சேர்க்கவில்லை. இது மேலும் பிரச்சனையை பெரிதாக்கியது.
நீதிமன்றத்தில் வழக்கு
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அகாடமியில் பயிற்சி பெற்றுவரும் சுகிர்தா முகர்ஜி, ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கு தகுதிச்சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்து என்னை விட்டுக் கொடுத்து விளையாடும்படி (பிக்சிங்) நிர்ப்பந்தம் செய்தார் என்று தேசிய பயிற்சியாளர் சவுதம் யாதீப் ராய் மீது புகார் குண்டுகளை வீசியதுடன், தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார் மணிகா. இந்த வழக்கை விசாரணை செய்த ஓய்வுபெற்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு சமர்ப்பித்த அறிக்கை, ‘‘தேசிய பயிற்சியாளர் ‘பிக்சிங்’ செய்ய முயன்றார் என்ற புகார் உண்மைதான். விளையாட்டு வீரர்களின் நலனை விட தங்களது நலனுக்காகத் தான் டேபிள் டென்னிஸ் நிர்வாகிகள் பாடுபடுகிறார்கள் என்பதையும் அம்பலப்படுத்தியது’’. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரணை செய்த தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ரேகா பல்லி, இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளன நிர்வாகக் குழுவை ஒட்டுமொத்தமாக இடைநீக்கம் செய்து புதிய நிர்வாகிகளை நியமிக்கவும் உத்தரவிட்டார்.
யார் இந்த மணிகா?
தெற்கு தில்லியில் நாராயண விகார் பகுதியில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். இளமைப் பருவத்தில் விளையாட்டா? படிப்பா? எதை தேர்வு செய்யப் போகிறாய் என்று அப்பா கிரிஷ் பத்ரா, அம்மா சுஷ்மா கேட்டபோது, டேபிள் டென்னிஸை தேர்வு செய்து கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திக் கொண்டவர். சகோதரி அஞ்சால், சகோதரர் சாகில் டேபிள் டென்னிஸ் விளையாடி வந்ததால் 5 வயதிலேயே பயிற்சியை துவக்கி 13 வயதில் நாட்டிற்காக விளையாடத் தொடங்கி முன்னணி நட்சத்திரமானார். காமன்வெல்த் மற்றும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர், குழு போட்டிகளில் 5 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். 19 வயதில் காமன்வெல்த் விளையாட்டில் கால் இறுதி வரைக்கும் சென்ற முதல் வீராங்கனை என்ற பெருமைக்கும் சொந்தமானார். ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகவும் புகழ்பெற்ற ஸ்வீடன் கார்ல்சன் பல்கலைக் கழகத்தில் உதவித்தொகையுடன் டேபிள் டென்னிஸ் பயிற்சிக்கு கிடைத்த அரிய வாய்ப்பை நிராகரித்தவர். பல்வேறு ‘மாடலிங்’ நிறுவனங்கள் தாமாக முன்வந்து அளித்த வாய்ப்புகளையும் உதறித் தள்ளியவர்.
விஸ்வரூபம்...
பெரும் வளர்ச்சி அடைந்து வரும் விளையாட்டு உலகம், தனது ரசிகர் கூட்டத்தை விரிவடைய செய்து கொண்டே செல்கிறது. மறுபுறம், விளையாட்டு துறையை அச்சுறுத்தும் பூதமாக புகுந்த சூதாட்டம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. தங்களுக்குப் பிடித்தமான வீரர்களை ஹீரோக்களாக நினைத்து பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், தொழிற்சாலைகள் கூட செல்லாமல் விடுப்பெடுத்து முட்டி மோதிக்கொண்டு டிக்கெட் வாங்கி நேரில் பார்த்து ரசிப்பதும், தொலைக்காட்சி முன்பு தவமிருக்கும் ரசிகர்கள் விளையாட்டை நேசிக்கும் ரசிகர்கள் பலரும் கிரிக்கெட், டென்னிஸ், டேபிள் டென்னிஸை வெறுக்க தொடங்கி விட்டனர்.
நீதி வென்றது
இதுகுறித்து மணிகா கூறுகையில், தேசத்திற்கு பெருமை சேர்க்க வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன். ஆனால், என்னை மோசமாக நடத்தியதால் மன அழுத்தம் ஏற்பட்டது. ஒலிம்பிக் போட்டியில் முழு கவனம் செலுத்த தவறினேன். பதக்கம் பெறும் வாய்ப்பையும் பறிகொடுத்தேன். வேறு வழியில்லாத நிலையில் நீதிமன்றத்தை அணுகினேன். நீதிமன்றமும் எனது நம்பிக்கையை நிலைநாட்டியது என்று கூறியுள்ளார். நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதால் சூதாட்ட கும்பல் விரிக்கும் ஆசை வலையில் சிக்காமல், இடம் கொடுக்காமல் விளையாட வேண்டும். அதுதான் விளையாட்டுக்கு நல்லது. அப்படி இல்லாமல், ‘மேட்ச் பிக்சிங்’ சூதாட்ட குற்றங்களில் ஈடுபடும் வீரர்கள், சூதாட்ட தரகர்கள், பயிற்சியாளர்கள், தேர்வாளர்கள் உள்ளிட்ட அனைவரும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ‘மேட்ச் பிக்சிங்’ என்ற பூதத்தை ஒழிக்க முடியும்.
- சி.ஸ்ரீராமுலு