states

img

பிரதமர் மோடி மிகவும் ஆணவம் கொண்டவர்

மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக்  கடும் சாடல்

தாத்ரி, ஜன.3- “வேளாண் சட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்ததாகவும், அவருடனான அந்த 5 நிமிடச் சந்திப்பு முழுமையும் சண்டையாகவே இருந்தது” என்றும் மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.  பிரதமர் மோடி ஒரு திமிர்ப் பிடித்தவர்... ‘அரகண்ட்’ என்று மாலிக் விமர்சித்துள்ளார். ஹரியானா மாநிலம், தாத்ரியில் ஞாயிறன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாலிக் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: “நான் சமீபத்தில் பிரதமரைச் சந்தித்தேன். அவரிடம் வேளாண் சட்டப் பிரச்சனை குறித்து விவாதிக்கத் தொடங்கினேன். ஆனால், நான் பேச ஆரம்பித்த 5-வது நிமிடத்திலேயே அது வாக்குவாதமாக மாறி விட்டது. பிரதமர் மிகவும் இறுக்கமாக பேசினார். நமது சொந்த விவசாயிகள் 500 பேர் இந்தப் போராட்டத்தால் உயிரிழந்து விட்டதாக நான் கூறியபோது அவர் உடனே , ‘என்னாலா இறந்தார்கள்..?’ என்று கோபமாக கேட்டார்.

நானும் உடனே, ‘ஆமாம் நீங்கள்தான் இந்த நாட்டின் ராஜா. அதனால் உங்களால்தான் அவர்கள் இறந்தனர்...’ என்று பதிலளித்தேன். நான் அவருடன் சண்டை போட்டேன். அவர் என்னிடம், அமித் ஷாவைச் சந்தித்துப் பேசுமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து நான் அமித்ஷாவையும் சந்தித்தேன். ஒரு நாய் செத்தால் கூட இரங்கல் தெரிவித்து பிரதமர் கடிதம் அனுப்புகிறார். ஆனால் இறந்த விவசாயிகளுக்கு அவர் இதுவரை இரங்கல் தெரிவிக்கவில்லை.  குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்கு கிடைக்க மாநில மற்றும் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்.

போராட்டத்தின் போது விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும். இதில் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இந்த போராட்டம் முற்றிலும் ஓய்ந்தது என்று அரசாங்கம் எண்ண வேண்டாம். அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அவ்வளவுதான். ஏதாவது சிறு விஷயம் தவறாக நிகழ்ந்தால் கூட மீண்டும் போராட்டம் சூடு பிடிக்கும். சென்ற மாதம் கூட ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 3 வேளாண் சட்டங்களும் கொஞ்சம் காலம் சென்று மீண்டும் கொண்டு வரப்படும் என்று கூறி இருந்தார். எனவே விவசாயிகள் பதுங்கி இருக்கிறார்கள். மீண்டும் பாய்வார்கள்… ஏனென்றால் விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பு!. இப்படிச் சொல்வதற்காக எனது பதவியைப் பறித்தாலும் கூட நான் கவலைப்பட மாட்டேன்.” இவ்வாறு சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.