states

கொரோனாவுக்கு கங்கை நீரை உபயோகப்படுத்த ஆய்வு மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் பெறப்படவில்லை

புதுதில்லி, டிச.23- கங்கையாற்றின் தரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் எழுப்பியிருந்த கேள்விக்கு, ஒன்றிய அரசு மழுப்பலான பதிலை அளித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், சமீபத்திய காலத்தில், கோவிட் 19 இல் இருந்து குணப்படுத்த கங்கை நதி நீரை உபயோகிப்பதன் மீதான ஆய்வினை மேற்கொள்ளுமாறு, “கங்கையை தூய்மைப்படுத்துவதற்கான தேசியப்பணி” யிலிருந்து, அரசுக்கு ஏதேனும் வேண்டுகோள் வந்துள்ளதா என்றும், ஆம் எனில், அதன் விபரங்கள் மற்றும் இதன் மீது எடுக்கப்பட்ட முடிவுகள் என்னென்ன என்றும், கோவிட் 19 காலத்தில், கங்கை நதி நீரின் தரம் பற்றிய அறிக்கை ஏதேனும் அரசால் பெறப்பட்டுள்ளதா என்றும், ஆம் எனில், கங்கை நதி நீரின் தரத்தை மேம்படுத்த அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்றும் கேட்டிருந்தார். இதற்கு எழுத்துமூலம் ஒன்றிய நீர்சக்தித் துறை இணையமைச்சர் பிரஹலாத் சிங் பட்டேல் அளித்த பதில்கள் வருமாறு:

கோவிட் 19 வைரசிலிருந்து குணப்படுத்த, கங்கை நதி நீரை உபயோகப்படுத்துவதன் மீது, ஆய்வினை மேற்கொள்ளுமாறு எந்தவொரு வேண்டுகோளும் கங்கையை தூய்மைப்படுத்தும் தேசியப் பணியிடமிருந்து  பெறப்படவில்லை. எனினும், “கோவிட் 19-க்குத் தடுப்பாக கங்கையின் படிமங்கள்” மற்றும் “கோவிட் 19-க்கு கங்கைநீர் சிகிச்சை” என்ற இரண்டு முன்மொழிவுகளை 2020 ஏப்ரல் 28 அன்று, கங்கையை தூய்மைப்படுத்தும் தேசியப்பணி அமைப்பானது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அவர்கள் தரப்பு ஆய்வுக்காக அனுப்பியுள்ளது. அடுத்து, கோவிட் 19 காலகட்டத்தில், கங்கை நதி நீரின் தரத்தை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால்  கண்காணிக்கப்பட்டது.

அவர்களால்    மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், கங்கை நதி மற்றும்  அதன் கிளைகளின் நீரின் தரத்தின் மீது பொது முடக்கத்தால் ஏற்பட்ட தாக்கங்களை, மாநில  மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் மற்றும் பிற முகமைகளால் மதிப்பீடு செய்ததன் அடிப்படையில், கங்கை நதியின் பல்வேறு நீட்சிகள் மற்றும் அதன் கிளைகளுக்கான  பல்வேறு நீர்த் தர அளவுகோல்கள் கண்காணிக்கப்பட்டதில் எந்தவொரு உறுதியான போக்கும் இருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. எனினும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களின் அறிக்கையின்படி, சில நீர்த் தர அளவுகோல்களில், பல்வேறு அளவுகளில் முன்னேற்றம் உள்ளதாக அறியப்படுகிறது. இதற்கு காரணம், பொதுமுடக்க காலத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் காரணமாக அதிகப்படியான புதிய நீர் வரத்து,  தொழிற்சாலை கழிவுகள் வெளியேற்றம் இல்லாமை, நதியில் குளித்தல், சடங்குகள் செய்தல் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகளால் குறைந்த மனித நடவடிக்கைகள், கட்டுப்படுத்தப்பட்ட - சுற்றுலாக்கள், திடக்கழிவுகள், அதிகப்படியான துணிகள் துவைத்தல் ஆகியவைகளாகும்.

பொது முடக்கத்தின் போது, எந்தவித தடங்கலுமின்றி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுவது உறுதி செய்யப்பட்டது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தொடர்ந்து செயல்படுகையில் எல்லாவித பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளையும் பின்பற்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.நதிகள் மாசு அடைதலை குறைப்பதற்கான பல்வேறு தலையீடுகள் தொடரப்பட்டன. அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.  நமாமி கங்கா மற்றும் நீர் சக்தித் துறை அமைச்சகத்தின் தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டம் மற்றும் வீட்டு வசதி- நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் அம்ருத் & ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகியவற்றின் கீழ், கழிவு நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு மற்றும் பிற மாசு குறைப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்காக, மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. நகர்ப்புறங்களிலிருந்து வரும், நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பிற்காகவும், மாசுபட்ட நதி நீட்சிகளின் நீரின் தரத்தை மீட்டெடுக்க, இடைமறித்தல், திருப்பி விடுதலுக்காகவும், மாநில அரசு நதிகளுக்கான செயல் திட்டங்களை உருவாக்கியுள்ளது.

மாசு கட்டுப்பாட்டு கமிட்டிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட முறையின் கீழ், நீர் (மாசு கட்டுப்பாடு மற்றும் தடுப்பு) சட்டம், 1974 இன் பல்வேறு சரத்துகளின் மூலம் தொழிற்சாலை மாசினை ஒழுங்குபடுத்துதல் அமல்படுத்தப்படுகிறது. பதினேழு வகையான நிறுவனங்களில், ஆன்லைன்   மூலம் கழிவுகளை தொடர்ந்து கண்காணிக்கும் முறைகள் நிறுவப்பட்டுள்ளன. கழிவுகளின் தரம் பற்றிய நேரத்துக்குண்டான உண்மையான தகவல்களை பெறுவதற்காக,  நாட்டில் தொழில் நிறுவனங்களில் அமைக்கப்படும் அதிகமான மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினால் வழங்கப்படும் வழிகாட்டுதல்கள் மூலமே நிறுவப்படுகின்றன. இந்த வழிகாட்டுதல்களுக்கு இணங்காத நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு அவைகளுக்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.  இவ்வாறு பதிலளிக்கப்பட்டுள்ளது. (ந.நி.)