லக்னோ, பிப்.7- “உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி, இதுவரை ஒரு வார்த்தை கூட, விவசாயிகளைப் பற்றி பேசாதது ஏன்?” என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் கேள்வி எழுப்பியுள்ளார். சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அனைவரும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள், முகம்மது அலி ஜின்னாவின் வாரிசுகள் என்று பிரதமர் மோடி துவங்கி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதற்கு பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார். விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ஜின்னாவா, கொண்டுவந்தார்? குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காததற்கு ஜின்னாவா காரணம்? என்று கேள்விகளை எழுப்பினார். எனினும், பாஜக மத ரீதியான பிரச்சாரத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மேற்கு உத்தரப் பிரதேசத்தின் முசாபர் நகரில், கடந்த 2013-ஆம் ஆண்டு சங்-பரிவாரங்கள் பெரும் வன்முறையைத் தூண்டிவிட்டனர். இதில், 42 முஸ்லிம்கள், 20 இந்துக்கள் பலியாகினர். இந்த கலவரத்தை வைத்து, 2014 மக்களவைத் தேர்தல், 2017 சட்டமன்றத் தேர்தல், 2019 மக்களவைத் தேர்தலில் வென்ற பாஜக, தற்போது 2022 சட்டமன்றத் தேர்தலிலும் முசாபர் நகரை நினைவூட்டி மீண்டும் மத அடிப்படையில் வாக்குகளைத் திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில், ‘’முசாபர் நகர் இந்து முஸ்லிம் மேட்ச் நடக்கும் இடம் கிடையாது’’ என்று திகாயத், மீண்டும் பாஜகவை காட்டமாக விமர்சித்துள்ளார். ‘’மேற்கு உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சி குறித்து பேச வேண்டும். ஆனால் பாஜக இந்து,
முஸ்லிம், ஜின்னா என்று மதம் குறித்து பேசி வருகிறது. வேளாண் மசோதாக்களைக் கொண்டுவந்து விவசாயிகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய பாஜக, பின்னர் அதைத் திரும்பப் பெற்றது. எனவே, இந்தத் தேர்தலில் பாஜக விவசாயிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதைப் பார்க்கத்தான் போகிறோம். ஆனால், பிரதமர் மோடி விவசாயிகள் குறித்து வாய் திறப்பதே இல்லை, போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகள் குறித்தும் எதுவும் பேசுவது இல்லை. அதுகுறித்துப் பேசுவதையே பிரதமர் தவிர்த்து வருகிறார்” என்று திகாயத் குறிப்பிட்டுள்ளார்.