states

வரிச்சலுகைகளால் பெருமுதலாளிகளுக்கே லாபம்!

எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனம்

புதுதில்லி, பிப். 1 - 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை,  பிரதமர் நரேந்திர மோடி வரலாற்றுச் சிறப்பு மிக்க பட்ஜெட் என்று பாராட்டியுள்ள நிலையில், இந்த பட்ஜெட்டும் வழக்கம்போல பெருமுதலாளிகளின் நலனை மனத்தில் வைத்தே உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஏழை, நடுத்தர மக்களின் சுமையை, வேலையின்மையை, விலைவாசி உயர்வை மேலும் அதிகரிக்கவே இந்த பட்ஜெட் வழி வகுக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களின் கருத்தைத் தெரிவித்துள்ளனர். “வளர்ந்த இந்தியாவின் மகத்தான நோக்கத்தை நிறைவேற்ற இந்த பட்ஜெட் வலுவான அடித்தளத்தை உருவாக்கும். இந்த பட்ஜெட் பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. இதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்ஜி மற்றும் அவரது குழுவை நான் வாழ்த்துகிறேன். இது வரலாற்று பட்ஜெட்” என்று பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் நிலை யில், காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி கட்சி,  ஐக்கிய ஜனதாதளம், ஆம் ஆத்மி, திரிணா முல் காங்கிரஸ், பாரத் ராஷ்டிர சமிதி, மக்கள்  ஜனநாயக கட்சி தலைவர்கள், இந்த பட் ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

“ஒவ்வொரு வீட்டிலும் பணவீக்கம் (விலைவாசி) பிரச்சனையாக உள்ளது. சாமானியர்கள் சிரமத்தில் உள்ளனர். ஆனால், அன்றாடப் பயன்பாட்டுப் பொருட் களின் விலையைக் குறைக்கும் வகையில் பட்ஜெட்டில் எதுவும் இல்லை. மாவு, பருப்பு, பால், சமையல் எரிவாயு விலையை உயர்த்தி நாட்டை கொள்ளையடித்த அரசு தான் நரேந்திர மோடி அரசு!” என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லி கார்ஜூன கார்கே சாடியுள்ளார். “இந்த பட்ஜெட்டில் பணவீக்கத்திற்கு நிவாரணம் இல்லை. மாறாக, இந்த பட்ஜெட்  பணவீக்கத்தை அதிகரிக்கும் வகையில் உள்ளது. வேலையின்மையை அகற்ற உறுதியான திட்டம் எதுவும் இல்லை. கல்விக்கான நிதிஒதுக்கீட்டை 2.64 சதவிகிதத்திலிருந்து 2.50 சதவிகிதமாக குறைப்பது துரதிர்ஷ்டவசமானது. அதே போல சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீட்டை யும் 2.2 சதவிகிதத்திலிருந்து 1.98 சத விகிதமாக குறைத்திருப்பது தீங்கு விளைவிக்கும்” என்று தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாள ருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள் ளார். மேலும், “தில்லிவாசிகள் ரூ. 1.75 லட்சம் கோடியை வருமான வரியாக ஒன்றிய அரசுக்கு செலுத்திய நிலையில், தில்லி நகரின் வளர்ச்சிக்கு ரூ. 325 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“2014-இல் ஒன்றிய அதிகாரத்தில் அமர்ந்தபோது, 2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம். 2022-க்குள் அனைவருக்கும் வீடு வழங்கப்படும். 2022-க்குள் 80 கோடி பேருக்கு வேலை கிடைக்கும் என்று பாஜக அரசு  கூறியது. இப்போது 2023-ஆம் ஆண்டு வந்து விட்டது. ஆனால் அவர்களின் மக்களை ஏமாற்றும் பழக்கம் போகவில்லை” என்று பீகார் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி கூறியுள்ளார். “100 சதவிகித எம்.பி.க்களை பாஜக-வுக்கு வழங்கிய பீகார் பட்ஜெட்டில் மீண்டும் பாஜகவால் ஏமாற்றப்பட்டுள்ளது” என்றும் தேஜஸ்வி குற்றம் சாட்டியுள்ளார். “ஒன்றிய அரசின் இந்த பட்ஜெட் நாட்டின்  எதிர்காலம் சார்ந்தது அல்ல, முற்றிலும் சந்தர்ப்பவாதமானது, மக்கள் விரோத மானது. குறிப்பிட்ட ஒரு வகுப்பினருக்கு மட்டுமே பயன் அளிக்கும் இந்த பட்ஜெட்.  ஏழைகளுக்கு உதவப்போவது இல்லை. 2024 மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. வரு மான வரி விதிப்புகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் யாருக்கும் உதவாது. இந்த பட்ஜெட்டில் நம்பிக்கையின் ஒளி இல்லை. இது இருண்ட பட்ஜெட்” என்று மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

“பாஜக அரசின் பட்ஜெட் தாக்கல் தசாப்தத்தை (பத்தாண்டுகளை) நிறைவு செய்கிறது. ஆனால் பொதுமக்களுக்கு முன்பும் எதுவும் கொடுக்கவில்லை. இப்போ தும் எதுவும் கொடுக்கவில்லை. பாஜக-வின்  பட்ஜெட் பணவீக்கத்தையும், வேலை யின்மையையும் மேலும் மேலும் அதிகரிக் கிறது. விவசாயிகள், தொழிலாளிகள், இளை ஞர்கள், பெண்கள், தொழில் வல்லுநர்கள், வணிக வர்க்கத்திற்கு நம்பிக்கை அளிக்க வில்லை” என்று உத்தரப் பிரதேச முன்னாள்  முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலை வருமான அகிலேஷ் தெரிவித்துள்ளார். “இந்த பட்ஜெட் மோடி அரசின் தோல்வி யை கணித ரீதியாக உறுதிப்படுத்துகிறது. இது ஒரு சில மாநிலங்களுக்கான பட்ஜெட் போல் தெரிகிறது. ரூ. 10 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். தெலுங்கானாவில் நாங்கள் அதிகமான வரியைச் செலுத்துகிறோம். அவ்வா றிருக்க, இப்போது அறிவித்துள்ள வரிச்சலு கை எங்களுக்கு பயன்படாது. உள்கட்டமை ப்புக்காக ரூ. 10 ஆயிரம் கோடி என்று அறி வித்திருக்கிறார்கள். அது எந்த உள்கட்ட மைப்பு? என்று தெளிவாக கூறப்படவில்லை. தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அல்லது பாஜக ஆளும் மாநிலங்களில்தான் வளர்ச்சித் திட்டங்களை ஒன்றிய அரசு அறிவிக்கிறது. அவர்கள் (ஒன்றிய அரசு) எங்களிடம் (தெலுங்கானாவிடம்) ரூ. 1000 கோடி கடன்பட்டுள்ளனர். அந்த நிலுவைத் தொகையையாவது உடனடியாக செலுத்துமாறு நிதியமைச்சரிடம் கேட்டுக் கொள்கிறேன்” என்று பாரத் ராஷ்ட்டிர சமிதி  கட்சியின் சட்ட மேலவை உறுப்பினர் கவிதா  கல்வகுந்தலா கூறியுள்ளார்.

“வரிச்சலுகைகளால் பொதுமக்கள் பயனடைய வேண்டும், ஆனால் அது அவர்களின் முதுகை உடைக்கிறது. அவர்களுக்கு (சாமானிய மக்கள்)  பலனளிப்பதற்கு பதிலாக, நலத்திட்டங்கள்  மற்றும் மானியங்கள் ரத்து செய்யப்படு கின்றன. சில கூட்டுக்களவாணி முதலாளிகள் மற்றும் பெரிய வணிகர்களுக்காகவே இது  செய்யப்படுகிறது. இதனால், வறுமைக் கோட்டிற்கு மேல் உயர்ந்த மக்கள், மீண்டும்  வறுமை நிலைக்குக் கீழே விழுந்துள்ளனர்” என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல் வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரு மான மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார். “பட்ஜெட்டில் எதுவும் இல்லை. இது ‘சப்னோ கா சவுதாகர்’ போன்றது - அதாவது கனவு கண்டு எழுந்தவுடன் எதுவும் நிஜமா காது. மேலும், வேலையின்மை, பணவீக்கத் தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை” என்று ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்.பி. ராஜீவ் ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார். “தேர்தலை மனதில் வைத்து தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இது, நடுத்தர மக்க ளுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள் ளன. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, விவ சாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை பற்றி அரசு எதுவும் கூறவில்லை. ரயில்வேயும் புறக்கணிக்கப்படுகிறது. இந்த பட்ஜெட் ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டாக உள்ளது” என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. டிம்பிள் யாதவ் குறிப்பிட்டுள்ளார். “இந்த பட்ஜெட், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு போன்ற நாட்டின் உண்மையான பிரச்ச னைகளை நிவர்த்தி செய்யவில்லை. இதற்கு முன்பும் படோடோபமான அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டன. அவற்றைச் செயல்படுத்துவது பற்றி ஒன்றுமில்லை. பிரதான் மந்திரி கிசான் யோஜனாவால் பயனடைந்தது விவசாயிகள் அல்ல. காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே!” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் விமர்சித்துள்ளார்.