states

img

மதக் கலப்பு மணம் செய்துகொண்ட தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பு வீடு அளித்திடுக - உயர்நீதிமன்றம் உத்தரவு

உத்தரப்பிரதேச மாநிலத்தில், மதக் கலப்பு மணம் செய்துகொண்டு தம்பதிகள், தங்களுக்கு தங்கள் மாநிலத்தில் மதவெறியர்களால் ஆபத்து இருப்பதாகவும், எனவே தில்லியில் பாதுகாப்புடன் வாழ்வதற்கு வீடு அளித்திட தில்லி அரசாங்கத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்கள். அதன்மீது தில்லி உயர்நீதிமன்றம் அவர்களுக்கு பாதுகாப்புடன் வீடு அளித்திடக் கோரி, தில்லி அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த மதக்கலப்பு மணம் செய்து கொண்ட தம்பதிகள்,(கணவர் முஸ்லீம், வயது 25, மனைவி இந்து, வயது 21)  மாநிலத்தில் இயங்கிடும் மதவெறி அமைப்புகள் தங்களைத் துன்புறுத்தக்கூடும் என்று தாங்கள் பயப்படுவதாகவும், எனவே உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்கீழ் தலைநகர் தில்லியில் பாதுகாப்புடன் வீடு அளித்திட வழிசெய்ய வேண்டும் என்றும் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதியரசர் அனு மல்ஹோத்ரா, தில்லி அரசாங்கத்திற்கும், காவல் துறையினருக்கும் நீதிமன்றத்தை அணுகியுள்ள தம்பதியினருக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்றும், தம்பதியினருக்கு பாதுகாப்புடன் வீடு அளித்திட வேண்டும் என்று தில்லி அரசாங்கத்திற்குக் கட்டளை பிறப்பித்தும் உத்தரவிட்டார்.

மதக் கலப்பு மணத் தம்பதிகள், தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தாங்கள் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கோரி, முதலில் தில்லி அரசாங்கத்தின் சமூக நலத்துறையை நாடியதாகவும், ஆயினும் அவர்கள் தங்கள் கோரிக்கையை நிராகரித்துவிட்டதாகவும், எனவேதான் நீதிமன்றத்திற்கு உரிய உத்தரவு பிறப்பிக்கக்கோரி வந்திருக்கிறோம் என்றும் தெரிவித்திருந்தார்கள்.

பின்னர் நீதிமன்றத்தில் தில்லி சமூக நலத்துறை சார்பில் ஆஜரானவர்கள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, சக்தி வாகினி வழக்கில் அளிக்கப்பட்டதுபோன்று, போதுமான அளவிற்கு பாதுகாப்புடன் இன்றே வீடு அளிப்பதாகத் தெரிவித்தார்கள்.  

அதன்பேரில் உயர்நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்தது.

;