states

img

கானாவை சீர்குலைக்கும் வலதுசாரிக் கொள்கைகள்

அக்ரா, ஜூலை 2- அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பிற பொருளாதாரச் சுமைகளுக்கு எதிராக கானா நாட்டு மக்கள் வீதிகளுக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். மேற்கு ஆப்பிரிக்க நாடான கானா, ஆப்பிரிக்கக் கண்டத்தில் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாகும். ஆப்பிரிக்க நாடுகளில் கானாவில் அதிகமான அளவில் தங்கம் உற்பத்தியாகிறது. தங்கம் உற்பத்தியில் இந்தக் கண்டத்தில் இரண்டாவது இடத்தில் கானா உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு முதலாளிகளுக்குச் சாதகமான கொள்கைகளால் சாதாரண மக்கள் பெரும் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர். 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 3.3 விழுக்காடு மட்டுமே பொருளாதாரம் வளர்ச்சியைக் கண்டது.

2021 ஆம் ஆண்டு ஆகஸ்டிலும் மக்கள் பெருந்திரள் போராட்டங்களை நடத்தினார்கள். நல்ல நிர்வாகத்தை வலியுறுத்தியும், தங்கள் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்கக் கோரியும் அரசாங்கத்திற்கு எதிராகத் திரண்டனர். சமூக ஊடகங்கள் வழியாக மக்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர். நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதிமொழிகள் தரப்பட்டன. கொரோனா பெருந்தொற்றும் போராட்டங்களைத் தள்ளிப் போடச் செய்தன. தற்போது மீண்டும் அதே உத்தியின் மூலம் மக்கள் திரட்டப்பட்டு வருகிறார்கள். பொருளாதாரத்தைச் சீரமைக்க அரசு நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நெருக்கடி மேலும் முற்றியது. உள்ளூர் நாணயத்திற்கான மதிப்பு பெரும் சரிவைக் கண்டது. கடன் வலையில் கானா சிக்கும் நிலை உருவானது. நிலைமையைச் சரி செய்ய முற்படாமல் மின்னணு பரிவர்த்தனைகளின் மீது  அதிக அளவு வரி உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்தது. சாதாரண மக்கள் மற்றும் சிறிய வர்த்தகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். இவர்கள்தான் தற்போது வீதிகளில் இறங்கிப் போராடி வருகிறார்கள்.

அனுமதி வாங்கி நடத்தப்படும் ஊர்வலங்களில் கூட காவல்துறையினர் தலையிட்டு தாக்குதல்களை நடத்துகின்றனர். பலர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இருப்பினும் போராட்டம் தொடர்கிறது. விலைவாசி உயர்வு, மின்னணு பரிவர்த்தனைகள் மீதான வரி உள்ளிட்டவற்றிற்கு எதிரான இந்தப் போராட்டத்திற்கு “எழு கானா” என்று பெயரிட்டிருக்கிறார்கள்.