நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இது போன்ற வன்முறைகளால் இளம் பெண்கள் கொலை செய்யப்படுவதும், தற்கொலை செய்யும் அவலநிலையும் உள்ளது. பல சமயங்களில் திருமணமான பெண்கள் குடும்ப வன்முறையால் குறிப்பாக வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்கு எதிராக நாடு முழுவதும் தன்னார்வலர்களும், மகளிர் அமைப்பினரும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் டி.க.இந்திராணி எழுதிய செவிலியர் மாணவர்களுக்கான சமூகவியல் புத்தகத்தில் வரதட்சணையை நியாயப்படுத்தும் வகையில் வரதட்சணையின் சிறப்புகள் என சில கருத்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்று சட்டத்தில் உள்ள நிலையில் செவிலியர் பாடத்திட்டத்தில் குடும்பங்களை கட்டமைப்பதில் வரதட்சணை முக்கிய பங்கு வகிக்கிறது. பெற்றோர்கள் கல்யாணத்திற்காக மற்றொருவருக்கு தொலைக்காட்சி, குளிர்சாதன பெட்டி, மின் விசிறி, துணிகள் மற்றும் வாகனங்கள் வழங்குகிறார்.
வரதட்சணை மூலம் பெற்றோரின் சொத்தில் இருந்து சம பங்கினை மகள்கள் பெற முடிகிறது.
வரதட்சணை மூலம் பெண்கள் கல்வி அதிகரிக்கிறது. நன்கு படித்து, உத்தியோகம் செல்லும் பெண்கள் அதிக வரதட்சணை கொடுக்க வேண்டிய தேவை குறைகிறது. இதனால், அநேக பெற்றோர்கள் தங்கள் மகள்களை படிக்க வைக்க முன்வந்துள்ளனர். எனவே, பெண் கல்வியை வரதட்சணை மறைமுகமாக ஊக்குவிக்கிறது. அசிங்கமான தோற்றம் கொண்ட பெண்கள் கூட அதிக வரதட்சணை கொடுத்து அழகான ஒருவரை கல்யாணம் செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கருத்துகள் பெண்கள் கல்வி கற்பதே திருமணத்திற்கான செலவுகளை குறைக்கும் நோக்கத்தோடு என்று குறுகிய வட்டத்திற்குள் கொண்டு வருவதாகவும், அசிங்கமான பெண்கள் அதிக வரதட்சணை கொடுக்க வேண்டும் என்று பிற்போக்கான கருத்துகளை மாணவர்கள் மனதில் விதைக்கும் வகையிலும் உள்ளது.
இந்த பகுதியை பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பெண்ணிய அமைப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.