states

img

கொரோனா இழப்பீடு கேட்போர் குஜராத்தில் அதிகம்!

புதுதில்லி, ஜன. 19 - குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைக் காட்டிலும், 9 மடங்கு அதிகமானோர் கொரோனா உயிரிழப்புக்கான இழப்பீடு கேட்டு விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது. கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் போது, உரிய சிகிச்சை கிடைக்காமல் அதிகம்பேர் பலியான மாநிலங்களில் பாஜக ஆளும் குஜராத்தும் ஒன்றாகும். இதுதொடர்பாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோது, அம்மாநில பாஜக அரசு அதனை மறுத்தது. இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தே காட்டியது. இந்நிலையில்தான், கொரோனா மரணங்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தைப் பெற- பதிவான இறப்பு எண்ணிக்கையைக் காட்டிலும், 9 மடங்கு அதிகமான விண்ணப்பங்கள் குஜராத்தில் குவிந்துள்ளது. உச்ச நீதிமன்றத் தரவுகளின்படி, குஜராத் மாநிலத்தில் அதிகாரப்பூர்வமான கொரோனா மரணங்கள் 10 ஆயிரத்து 094 மட்டுமே ஆகும். ஆனால், இதுவரை 89 ஆயிரத்து 633 பேர் இழப்பீடு கோரி விண்ணப்பித்துள்ளனர். இவற்றில் 68 ஆயிரத்து 370 கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 58 ஆயிரத்து 840 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டும் உள்ளது. 4 ஆயிரத்து 234 விண்ணப்பங்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டு உள்ளன.

குஜராத்திற்கு அடுத்தபடியாக, தெலுங்கானாவில் 3 ஆயிரத்து 993 அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை பதிவாகி இருந்த நிலையில், சுமார் 29 ஆயிரம் பேர் இழப்பீடு கோரியுள்ளனர். இங்கும் 15 ஆயிரத்து 270 மரணங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.  மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை, அதிகாரப்பூர்வ இறப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 41 ஆயிரம் என்ற நிலையில், 2 லட்சத்து 13 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. பரிசோதனை செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அல்லது கொரோனா மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்ட நாளிலிருந்து ஏற்படும் இறப்புகள் அது மருத்துவமனையில் நிகழ்ந்தாலும், மருத்துவமனைக்கு வெளியே நிகழ்ந்தாலும், கொரோனா இறப்புகளாகவே கருதப்படும். மேலும், கொரோனா பாசிட்டிவ் என கண்டறியப்பட்ட 30 நாட்களுக்குள் தற்கொலை செய்து கொண்ட ஒருவரின் குடும்ப உறுப்பினரும் நிதி உதவியைப் பெறுவதற்குத் தகுதியுடையவர் என்பது உச்ச நீதிமன்றத்தின் வரையறையாகும்.

இந்த வரையறையே கொரோனா மரணங்களின் எண்ணிக்கையை அதிகரித்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், எந்த வகையில் பார்த்தாலும், நாடு முழுவதும் பதிவானதைக் காட்டிலும் அதிகமான கொரோனா இறப்புகள் நாட்டில் நிகழ்ந்திருப்பதை இந்த விண்ணப்பங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. அதிகமான விண்ணப்பங்களைப் போல அசாம், ஹரியானா, கர்நாடகா, பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் இறப்புகளின் எண்ணிக்கையை விடவும் குறைவான பேர்களே இழப்பீடு கோரியிருப்பதும் நிகழ்ந்துள்ளது. பஞ்சாப்பில் அதிகாரப்பூர்வமாக 8 ஆயிரத்து 786 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், நிவாரணம் கோரி 16 ஆயிரத்து 557 விண்ணப்பங்கள் வந்துள்ளன. கர்நாடகத்தில் 38 ஆயிரத்து 376 அதிகாரப்பூர்வ மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், 27 ஆயிரத்து 325 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஜம்மு & காஷ்மீரில், இறப்புகளின் எண்ணிக்கை 4,483 ஆகவும், இழப்பீடு கோரும் விண்ணப்பங்கள் 3,115 ஆகவும் உள்ளது.