மயிலாடுதுறை,பிப்.20- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மீன் எண்ணெய் தயாரி க்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்துச் சிதறியதில் 2 பேர் பலி யாகினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கிராமத்தில் அலி உசேன் என்பவருக்கு சொந்தமான பிஸ்மி பிஷ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் மீனிலிருந்து எண்ணெய் மற்றும் பவுடர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வெளி மாநிலத்தவர் உள்பட அப்பகுதியை சேர்ந்தவர்களும் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பிப்ரவரி 20 ஞாயிற்றுக்கிழமையன்று எண்ணெய் மற்றும் பவுடர் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. மதியம் 12.10 மணியளவில் தொழிற்சாலையில் அமைந்துள்ள பாய்லர் திடீரென பயங்கர சத்தத்து டன் வெடித்து சிதறியது.
இதில் பாய்லர் அருகே வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அருண்ஓரானா (வயது25), பல்ஜித் ஓரான் (20) ஆகிய இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் இதில் பாய்லர் ஆபரேட்டர் உச்சிமேடு பகுதியைச் சேர்ந்த ரகுபதி (53), பந்தநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாரிதாஸ்(45), திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்த ஜாவித்(29) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். 3 பேரையும் சக பணியாளர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் அப்பகுதி மக்கள் தொழிற்சாலை முன்பு குவிந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.