வத்திராயிருப்பு, ஜூலை 7- விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சினிமா பாணியில் கடத்திவரப்பட்ட 400 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பாஜக கவுன்சிலரை தேடி வருகின்றனர். மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை யில் அழகாபுரி சோதனைச்சாவடியில் வெள்ளியன்று காலை காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மினி லோடுவேனை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அதில் பொருட்கள் ஏதும் இல்லை. அதனைத் தொடர்ந்து வேன் செல்ல காவல்துறையினர் அனுமதித்தனர். ஆனால் வேறு மாவட்ட பதிவு எண் கொண்ட மினி லோடுவேனாக இருந்ததால் ஓட்டுநர் கண்ணனிடம் தொடர்ந்து விசாரணை செய்தனர். அப்போது கண்ணன் சேலத்தில் இருந்து லோடு ஏற்றுவதற்காக சென்று கொண்டிருப்ப தாக தெரிவித்தார். வெறும் மினி லோடு வண்டியை சேலத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் வரை எதற்காக இயக்கிவர வேண்டும் என்று சந்தேகித்த காவல்துறை யினர், அவரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது கண்ணனின் செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த செல்போனை வாங்கி ஆன் செய்த போது எதிர் முனை யில் இருந்து ஒருவர் “ஏப்பா லோடு ஏற்றி வந்து விட்டாயா, சரக்கை எப்போது கொண்டு வந்து சேர்ப்பாய்” என்று கேட்டுள்ளார். இதனால் சுதாரித்த காவல்துறையினர் மீண்டும் வாகனத்தை தீவிரமாக சோதனை யிட்டனர். திரைப்பட பாணியில் மினி லோடு வேன் சரக்கு ஏற்றக்கூடிய பகுதிக்கு கீழ் 400 கிலோ குட்கா பொருட்கள் மூட்டையாக கட்டப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து கண்ணனை நத்தம்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் கண்ணனிடம் செல்போனில் எதிர்முனை யில் பேசியவர் செங்கோட்டை நகராட்சி 24 ஆவது வார்டு பாரதிய ஜனதா கட்சியின் கவுன்சிலர் செண்பகராஜன் என்று தெரிய வந்தது. இதனையடுத்து சிறப்பு காவல் பிரிவு போலீசார் தங்களின் தொடர் விசாரணை யை தொடங்கியுள்ளனர்.