states

img

ஜாபர் சாதிக்கிற்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிற்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 3.,500 கிலோ ‘சூடோபெட்ரைன்’ எனும் போதைப் பொருளை இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சட்டவிரோதமாகக் கடத்திய வழக்கில் ஜாபா் சாதிக்கை கடந்த மார்ச் 9 ஆம் தேதி மத்திய போதைப் பொருள் தடுப்புத் துறையினர் (என்.சி.பி.) தில்லியில் வைத்து கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தில்லி சிறையிலிருந்த ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தில்லியில் கைதான ஜாபர் சாதிக் விமானத்தில் நேற்று சென்னை அழைத்து வரப்பட்டார். பின்னர் சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தென் மண்டல அலுவலகத்தில் வைத்து ஜாபர் சாதிக்கிடம் அதிரடி விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து ஜாபர் சாதிக்கை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி சுதீர் குமார் சிரோஹி உத்தரவிட்டுள்ளார்.