states

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சொல்கிறார் சாதியால் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன!

சென்னை, மே 31 - பாமக-வின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ் திண்டிவனம் அருகே தைலாபுரம் பகுதியில் அமைந்துள்ள தனது இல்லத்திற்கு வருகை புரிந்தார்.  அங்குள்ள காரல் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்த அவர், தைலாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அரசியல் பயிலரங்கத்தை திறந்து வைத்து, அதன்பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உண்மையான எதிர்க்கட்சியாக பாமக மட்டுமே செயல்பட்டு வருகிறது. எங்களுடைய நோக்கம் 2026-இல் பாமக-வின் ஆட்சி அமைப்பது மட்டுமே. அதற்காக பல்வேறு உத்திகளையும் திட்டங்களையும் பின்பற்றி வெற்றி பெறுவோம்.  பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர்களை பற்றி விமர்சிப்பது தவறு. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் திமுக-விற்கு இணையான கட்சி பாஜக என்று சில மீடியாக்கள் சொல்லி வருகின்றன... ஆனால், உண்மையில் தமிழகத்தில் திமுக மட்டுமே பெரிய கட்சி. பாஜக என்பது சிறிய கட்சி. அதாவது, பாஜக வளர்ந்து வரும் கட்சி.. தேசிய அளவில் மிகப்பெரிய கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய அளவில் இன்னும் வளர்ச்சி அடையவில்லை. சாதியால் அடக்குமுறை என்பது மட்டும் இருக்கக் கூடாது. மற்றபடி சாதியால் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. சாதியால் பல்வேறு பழக்க வழக்கங்கள், திருமண முறைகள், உணவு முறைகள் ஆகியவற்றைக் கண்டறிய முடியும். சுதந்திர போராட்ட தியாகிகளையும் அவர்களது சமுதாயத்தை வைத்தே அடையாளம் காணமுடியும்.  இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.