states

தமிழகத்திற்கு 2,600 கனஅடி நீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

புதுதில்லி, அக்.30- தமிழகத்திற்கு நவம்பர் 1 முதல் 15 நாட்களுக்கு விநாடிக்கு 2ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறக்க வேண்டுமென காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்துள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89-ஆவது  கூட்டம் தில்லியில் காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்றனர். வினித் குப்தா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு நவம்பர் 1 முதல் 15 நாட்களுக்கு விநாடிக்கு 2 ஆயிரத்து 600 கன அடி தண்ணீரை கர்நாடகம் திறக்கவேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது. ஒழுங்காற்றுக் குழுவின் இந்த பரிந்துரையை காவிரி மேலாண்மை ஆணையம் பரிசீலித்து கர்நாடக அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கும். கடந்த முறை பிறப்பித்த உத்தரவை கர்நாடகம் முறையாக செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.