states

அரசு போக்குவரத்து தொழிலாளர் மாநில மாநாடு : நாளை துவங்குகிறது

கோயம்புத்தூர். ஜூன் 17– தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் 15 ஆவது சம்மேளன மாநாடு ஜூன். 19 துவங்கி 21வரை மூன்று நாட்கள் கோவை சிங்காநல்லூரில் உள்ள சாய் விவாக மஹாலில் நடைபெற உள்ளது. ஜூன் 19 ஆம் தேதி துவங்கும் இம்மாநாட்டில் சின்னியம்பாளையம் தியாகிகள் ஜோதி, வெண்மணி தியாகிகள் ஜோதி, சேலம் சிறைத்தியாகிகள் ஜோதி ஆகிய தியாகிகளின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு மாநாட்டு திடலை வந்தடைகிறது. இதேபோன்று உழைப்பாளி மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் முன்னின்று மறைந்த தியாகத் தோழர்கள் ஜே.ஹேமச்சந்திரன், மதுரை தியாகிகள், தோழர் அக்னிஸ் மேரி,  பொன்மலை தியாகிகள், தோழர் பி.ராமமூர்த்தி, தோழர் வி.பி.சிந்தன், தோழர் சிங்காரவேலர் ஆகிய தியாகிகளின் ஜோதிகள் மாநாட்டில் பெறப்படுகின்றன.  இதனைத்தொடர்ந்து நடைபெறும் மாநாட்டில் அரசு போக்குவரத்து ஊழியர்களின் பணி நிலமை, போராடிப்பெற்ற உரிமைகளை

பாதுகாப்பதற்கான முன்னெடுப்பு, பொதுபோக்குவரத்தை பலப்படுத்த வேண்டிய அவசியம், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய தேவை ஆகியவைகள் குறித்து இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.  மாநாட்டில் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன், சாலைபோக்குவரத்து சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.கே.திவாகரன், சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், அரசு போக்குவரத்து சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினர், பொருளாளர் வி.சசிக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டின் பொது நிகழ்வாக சூழலியல் குறித்தும், அரசியல் அமைப்பு சட்டம், பொது போக்குவரத்து உள்ளிட்ட தலைப்புகளில் சிறப்பு பொதுக் கருத்தரங்கங்கள் நடைபெற உள்ளது. இதில் சூழலியல் ஆர்வலர் பூவுலகின் நண்பர்கள் கே.சுந்தர்ராஜன், போக்குவரத்து நிபுணர் வி.அமுதன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.  மாநாட்டின் முத்தாய்ப்பாக அரசுபோக்குவரத்து காக்கிச்சட்டை உழைப்பாளிகள் பல்லாயிரம் பேர் பங்கேற்கும் செஞ்சட்டை பேரணி 21 ஆம்தேதி புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு காந்திபுரத்தில் துவங்க உள்ளது. இது பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்று சிவானந்த காலனியில் நிறைவடைந்து பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.