states

செந்தமிழ் நாடும், செங்கொடி இயக்கமும்! - கே.பாலகிருஷ்ணன்

மொழிவழி‌ மாநிலங்களை‌ வலுப்படுத்தி, அனைத்து மொழிகளுக்கும் சமமான முன்னுரிமை, தாய்மொழிகளுக்கு ஊக்கம், தாய் மொழியில் நிர்வாகம், அனைத்து மக்களுக்கும் அதிகாரம் என்ற திசையில்‌ போராட்டங்கள் வலுப்படுவதே இன்றைய ‘ஒற்றை ஆட்சி’ கூட்டத்துக்கு சாவுமணி அடிப்பதாக இருக்கும். தமிழ்நாடு நாள் அந்த நம்பிக்கையை தந்து வழிகாட்டி நிற்கிறது.

வரலாற்றில், தமிழ்‌ பேசும்‌ மக்கள் வாழும்‌ பகுதி ஒரே ஆட்சி நிர்வாக பகுதியாக அமைக்கப்பட்ட சிறப்பு‌ மிக்க நாள்  - நவம்பர் 1. இந்தச்‌ சாதனை‌ மிக எளிதாக‌ நிகழ்ந்துவிடவில்லை.‌ பல‌ ஆண்டுகள் உறுதி மிக்க போராட்டமும், ஏராளமான‌ உயிர்த் தியாகங்களுமே‌ இந்த நாளைசாத்தியமாக்கின. ஆனால், பாஜக/ஆர்.எஸ்.எஸ்‌ கூட்டத்துக்கு இந்த ஏற்பாடு உவப்பாக இல்லை.  மொழி வழி மாநிலங்களை‌ உடைத்து நொறுக்கி,  ஒற்றை ஆட்சியை திணிக்க வேண்டுமென்று‌ கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது. மாநிலங்களுக்கு அடிப்படையாக அமைந்த‌ மொழி உரிமைக்கும், மாநில‌ சுயாட்சிக்கும் முடிவுகட்ட நினைக்கிறது. எனவே, தமிழ்நாடு அமைவதற்கு பின்னணி யாக அமைந்த வரலாற்றை‌ இன்றைய‌ தலை முறைக்கு எடுத்துச்‌ சொல்வது அவசியமாகும். இல்லாவிட்டால் நாம் போராடிப் பெற்ற உரிமை கள் அதிகாரக் கோடாரிகளால் வெட்டி சரி க்கப்படும் அபாயம்‌ முன்னுக்கு வரக்கூடும்.

தமிழ்‌ கூறு நல்லுலகம்

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்”‌ என்கிறது ‌தொல்காப்பிய பாயிரம். இருப்பி‌னும், தமிழ்மக்கள் வாழும்  நிலப்பரப்பு முழுதும் ஒரே நாடாக என்றும் விளங்கியதுமில்லை; ஒருகுடை நிழலில் என்றும் இருந்ததுமில்லை. சங்க‌ காலத்தில்,‌ தென்பாண்டிநாடு, வேணாடு, குட நாடு, குட்ட நாடு, பூழிநாடு, பாண்டிநாடு, புனல்நாடு, பன்றி நாடு, அருவாநாடு, மலாடு என‌ பல நாடுகளாக அமைந்திருந்தது. பிற்காலத்தில்,மூவேந்தர் ஆண்ட நாடுகளிலும் ஒவ்வொரு நாடும் பல உபநாடுகளாகப் பிரிந்து கிடந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்‌ காலத்தில்‌, முதலாளித் துவ உற்பத்தி‌ முறை மெல்ல துளிர்விட்டது.‌ இந்த வரலாற்று வளர்ச்சியில் மக்களிடையே மொழிவழி‌ தேசிய உணர்வும் கெட்டிப்பட்டது. ஆனால், நாட்டை ஒட்டச் சுரண்டுவதிலேயே குறியாக இருந்த ஆங்கிலேய ஆட்சி, ஜன நாயக விருப்பங்களை மதிக்கவில்லை. காலனி ஆதிக்க நிர்வாகத்தில் மொத்தம் 3 மாகாணங்கள் அமைக்கப்பட்டன. மன்ன ராட்சிப் பகுதிகளும் தொடர்ந்தன. 1937 ஆம்  ஆண்டில் மாகாணங்களின் எண்ணிக்கை 11 ஆக்கப்பட்டது.  ஆனால் இந்த‌ மாற்றங்களைச்‌ செய்த காலனி ஆட்சியாளர்களுக்கு மொழி,  பண்பாடு, வரலாறு குறித்து எந்தக் கவலை யும் இருக்கவில்லை.

விடுதலையும்‌ மொழி உணர்வும்

எனவே, விடுதலைப் போராட்டக்‌ களத்தில்  மொழி உரிமை முழக்கங்கள் இயல்பாக எழுந்தன. தாய்மொழிக்கு முன்னுரிமை என்ற  தீர்மானங்கள் காங்கிரஸ் கட்சியின் மாநாடு களில் முன்னுக்கு வந்தன. 1920 ஆம் ஆண்டில், நாக்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்கு பின், அக்கட்சியின் மாகாண கமிட்டிகளை மொழிவழியாக அமைத்தனர். 1936-46 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் மொழிவழி  மாநிலங்கள் அமையும் என்ற வாக்குறுதியும் இடம்பெற்றது. ஆனால் விடுதலைக்கு பின் காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை மாற்றிக்  கொண்டது. மொழிவழி மாநிலங்கள்‌ வேண்டும்‌ என உயர்ந்த குரல்களை ஒடுக்கியது. இதே காலத்தில் செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ்,  தங்களுடைய மத பிரிவினை அரசியலுக்கு மவுசு குறைந்துவிடும் என்பதால் மொழிவழி மாநி லங்கள் அமைவதை கடுமையாக எதிர்த்தது. “சமஸ்கிருதம் நமது ஆட்சி மொழியாகும் வரை இந்திக்கு முன்னுரிமை கொடுத்து நமது ஆட்சி  மொழியாக நமது வசதிக்காக வைத்துக் கொள்ளலாம்” என்பது ஆர்.எஸ்.எஸ்.சின் குரு வான கோல்வால்கரின்  போதனை ஆகும். விடு தலைக்கு பிறகும், 1957 ஆம் ஆண்டு ஜன சங்கத்தின் தேர்தல் அறிக்கை, ‘கூட்டாட்சி முறையை ஒழித்து இந்தியாவை ஒரே நாடு என்று பிரகடனப் படுத்துவோம்’ என்றது.

தென்னகத்தை பொருத்தமட்டில் தட்சிண பிரதேசம் அமைப்போம் என்றது காங்கிரஸ் கட்சி. திராவிட நாடு கோரிக்கையை பேசி வந்தது திராவிட இயக்கம். கம்யூனிஸ்ட் கட்சி‌யே  இவ்விசயத்தில் மிகச் சரியான நிலைப்பாட்டை எடுத்தது. உழைக்கும் மக்களின் குரலாக நின்றது. தேசிய இனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைய வேண்டும் எனப்போராடியது.

முதல் வெற்றி

தெலுங்கு பேசும் பகுதிகளில் விசால ஆந்தி ராவிற்கான போராட்டம் தோழர் சுந்தரய்யா வின் தலைமையிலும், மலையாள மொழி பகுதி களை ஒருங்கிணைத்து நவ கேரளத்திற்கான‌ போராட்டம் தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலும் நடந்தது.‌ வங்காளம், மகாரா ஷ்டிரம் என நாடு முழுவதுமே‌ மகத்தான‌ போராட்டங்கள் எழுந்தன. ஒன்றுபட்ட‌ தமிழகம்‌  அமைவதற்கான‌ போராட்டத்தை தோழர்கள் பி.ராமமூர்த்தி, ஜீவானந்தம் ஆகியோர் முன்னெடுத்தார்கள். ஐக்கிய‌ தமிழகம்‌ என்ற முழக்கம் முன்னுக்கு வந்தது. இந்த‌ போராட்டக் களத்தில் முதல் வெற்றி யை சாதித்தது ஆந்திரம். 1953 அக்டோபர் 1ல், அன்றைய மதராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திர மாநிலம் முதல் மொழிவழித் தனி மாநில மாகப் பிரிக்கப்பட்டது.

அதற்காக  வீரம் செறிந்த போராட்டங்கள்‌ நடந்தன.‌‌‌ பெரும்‌ பேரணிகள், ஆர்ப்பாட்டங் களில் மக்கள்‌ இறங்கினார்கள். உச்சமாக பொட்டி‌ ஸ்ரீராமுலு  காலவரையறையற்ற உண் ணாவிரதத்தை மேற்கொண்டார். 65 ஆவது நாளில் அவர் மரணமடைந்தார். போராட்டங்கள் இன்னும் தீவிரமாகின. துப்பாக்கிச்‌ சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். இத்தகைய கடும் போராட்டத்தில் தான் ஆந்திர மாநிலத்திற்கான கோரிக்கை வெற்றியடைந்தது. ஆந்திர மாநிலம்‌‌ அமைவதை அன்றைய‌ ‘மெட்ராஸ் மாகாண‌‘ சட்டமன்றத்தில்‌  உள்ளப்  பூரிப்போடு வரவேற்றுப் பேசினார் தோழர் பி.ராமமூர்த்தி. “ஆந்திர மக்கள் அடைந்த  வெற்றி நமது நாட்டு மக்கள் சுதந்திரத்தை யும், ஜனநாயகத்தையும் நோக்கி நடை  போடுவதில் ஒரு மாபெரும் முன்னேற்ற மாகும். ... மொழிவழி ராஜ்ஜியங்கள் என்ற  கொள்கையை ஆட்சியாளர்கள் இந்த  மசோதாவில் பூரணமாக ஏற்றுக்கொள்ளா விட்டாலும் கூட இன்று ஆந்திர ராஜ்ஜியம் அமையப் போவது, நாடெங்குமே மொழிவழி  ஆட்சிகள் அமைவதை நோக்கி முன்னேறு வதில் முதல் பெரும் வெற்றியாக திகழப்போகி றது” என்றார் (16.07.1953).

தாய்மொழியில் விவாதம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு கமிட்டி 1946 தேர்தலிலேயே ஐக்கிய தமிழ கம் என்ற முழக்கத்தை முன்வைத்தது. மெட்ராஸ் மாகாண‌ சட்டமன்றம்‌ தாய்மொழி யில் நடக்க வேண்டும்‌ எனவும்‌ வலியுறுத்தி யது. ஆனால் இந்த கோரிக்கை‌ ஏற்கப்பட வில்லை. எனவே அவரவர்‌ தாய்மொழியில்‌ பேசு வதென‌ கட்சியின் மாநிலக் குழு தீர்மானம் நிறைவேற்றியது. 1952 நவம்பர் 3 ஆம் தேதி யன்று,‌‌ கம்யூனிஸ்ட் சட்டமன்ற‌‌ உறுப்பினர்கள் அவைக்குள் தமிழிலும், தெலுங்கிலும், மலை யாளத்திலும் கேள்விகளை முன்வைக்கவும், பேசவும் ஆரம்பித்ததும் அன்றைய அதிகாரி களுக்கும், மந்திரிகளுக்கும் தூக்கிவாரிப் போட்டது.‌ மக்களுக்கு‌ இந்தச் செய்தி உவப்பாக இருந்தது. “நான் தமிழன். என்னுடைய மொழியே இந்த  ராஜ்ஜியத்தில் ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமென்பது என்னுடைய கோரிக்கை. கல்விக் கூடங்களிலும், ஆட்சி மன்றத்திலும், நியாய மன்றத்திலும், நிர்வாகத் துறையிலும் பிர தேச மொழியே இயங்க வேண்டும்... உயர் நீதிமன்றத்திலும் தமிழ் மொழிதான் கையாளப்பட வேண்டும்” என முழங்கினார் ஜீவானந்தம். தமிழ் நாடு அமைவதற்காக சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான போராட்டத்தில் பி அண்ட் சி மில் தொழிலாளர்கள் 14 ஆயிரம்  பேர் உட்பட 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டார்கள்.

எல்லையைக் காக்க...

இந்த போராட்டங்களின்‌ தொடர்ச்சியாகவே ‘மாநில மறுசீரமைப்புச் சட்டம்’ வந்தது. மாநில மறுசீரமைப்பு‌ ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் முன் மக்களின்‌ விருப் பங்களை‌ முன்வைப்பதற்கு கம்யூனிஸ்டுகள் மட்டுமே இருந்தார்கள்.‌ காங்கிரஸ் கட்சி‌ தனது உறுப்பினர்களை தடுத்துவிட்டது. அத்துடன்‌ நிற்கவில்லை, சென்னை‌ ஆந்திராவுடன்‌ இணைக்கப்பட வேண்டுமென‌ குதர்க்கமாக போராட்டத்தை தூண்டியது. எனவே,‌ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திர மாநிலக் குழுவும், தமிழ் நாடு மாநிலக் குழு வும் ஒருமித்து நின்று‌ சென்னை‌ தமிழ் பேசும் பகுதியில்‌ இருக்க வேண்டும் என்று‌ தீர்மானம் போட்டு அறிவித்தார்கள். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த தமிழ்ப் பகுதிகளை தமிழ் நாட்டோடு இணைக்க வேண்டும் என தோழர் ஜீவானந்தம், ஜி.எஸ்.மணி, டி.மணி, நேசமணி ஆகியோர் தலைமையில் பெரும் போராட்டங்கள் நடந்தன. ம.பொ.சிவஞானம் உள்ளிட்டு‌ முக்கிய‌ தலைவர்கள் பலரும்‌ கம்யூனிஸ்டுகளுடன்‌‌ நின்றனர்.

அரசாங்கமோ கடும் அடக்குமுறையைக் கொண்டு போராட்டத்தை வீழ்த்த முயன்றது. துப்பாக்கிச் சூட்டில் 11 தமிழர்கள் பலியா னார்கள். இதன் தொடர்ச்சியாகவே தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டு டன் இணைந்தன. 1956 நவம்பர் 1-ல் இந்தியா, 14 மாநிலங்களாகவும் 6 ஒன்றியப் பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டது. தமிழகம் சென்னை மாநிலம் என‌ உருவாக்கப்பட்டது.

பெயருக்கும்‌ போராட்டம்

தமிழ் கூறும்‌ பகுதி ஒரே‌ மாநிலமாக அமைந்துவிட்டது, ஆனால் அதற்கு ‘தமிழ் நாடு’  என்று பெயரை‌ ஏற்கச் செய்யவும்‌ தனியாக போராட வேண்டியிருந்தது.‌ இதற்கான கம்யூனிஸ்டுகளின் முழக்கத்தை ஆளும் தரப்பினர் அலட்சியம் செய்தார்கள். “தமிழ் நாடு” என்று பெயர் வைத்துவிட்டால் சோறு கிடைத்துவிடுமா? பழைய இலக்கியங்களில் “தமிழ் நாடு” என்று பெயர் இருக்கிறதா? என் றெல்லாம் கேலி பேசினார்கள். அவர்களின் இலக்கிய அறிவும், மொழி அறிவும் அவ்வளவுதான். நாடாளுமன்றத்தில் 1961 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்ற மசோதாவை தோழர் பி.ராமமூர்த்தி கொண்டுவந்தார். அவர்  சிறையில் இருந்த சூழலில், இந்த மசோதாவை முன்வைத்து வாதாடினார் மேற்கு வங்கத்தை‌ சேர்ந்த‌ கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ் குப்தா.  அண்ணாவும் அதனை ஆதரித்தார். ஆனால்  மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப் பட்டது. இதுபோன்று‌ பல்வேறு‌ அடிப்படையான பிரச்சனைகளில்‌ தமிழகம் எழுச்சியடைந்த பின்னணியிலேயே ஆட்சி மாற்றம்‌ நிகழ்ந்தது.‌ அண்ணாவின் தலைமையில்‌ திமுக ஆட்சி அமைத்தது. அதற்கு பிறகே‌ மாநிலத்திற்கு “தமிழ் நாடு” பெயர் சூட்டலும் சாத்தியமானது.

தாய்மொழிக்கு முதலிடம்

தாய் மொழி தொடர்பான மிகத் தெளிவான நிலைப்பாடும், உழைக்கும் மக்களின் நலன் காப்பதில் ஊசலாட்டமில்லாத தெளிவுமே கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டின் அடித் தளமாகும். இப்போது எழுந்திருக்கும் ‘இந்தி  திணிப்பு’ அச்சுறுத்தலுக்கும் அதுவே சரியான  தீர்வினைக் கொடுத்திடும். சிலர் “இந்தியை ஏற்றால் என்ன?” என்று கேட்கிறார்கள். வேறு  சிலரோ, “ஆங்கிலமே முதன்மை” என்று பேசி, தமிழை இரண்டாம் இடத்திற்கு தள்ளு கிறார்கள். இந்த இரண்டு பார்வையுமே தவறான விளைவுகளை உள்ளடக்கியது. 1952 ஆட்சி மொழித் தீர்மானம் சட்டமன்ற த்தில் வந்தபோது கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கள் முன்வைத்த திருத்தங்கள் இப்போதும் நினைவில் கொள்ள வேண்டியவை.

• ஆட்சி நிர்வாக மொழியினை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற்ற உறுதியான நட வடிக்கை தேவை. • அனைத்துத்துறை நடவடிக்கைகளிலும் தமிழை பயன்படுத்த வேண்டும்.

• உயர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் இதர நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும், தீர்ப்புகள், உத்தரவுகள் உட்பட ஆங்கிலத்தோடு தமிழை யும் பயன்படுத்திட உடனடியாக அங்கீகரிக்க வேண்டும்.

• அரசுத் தேர்வுகளுக்கு ஆங்கிலத்தோடு தமிழையும் அங்கீகரிக்க வேண்டும்.1963 ஆம் ஆண்டில் இருந்து எல்லா கல்லூரிகளிலும் கற்பித்தல் மொழியாக தமிழை ஆக்கிட வேண்டும் என்ற உத்தரவை அமலாக்க உறுதியோடு செயல்படுவதுடன் அனைத்து பிரிவு கல்வி நடவடிக்கைகளிலும் இதனை விரிவாக்கிட வேண்டும்.

• அரசியல் சட்டத்தின் 343(30) பிரிவின் படி இந்தி மொழி பேசாத மக்களின் நலனுக்கு தேவைப்படும் வரையில் காலவரையறை நிர்ணயிக்காமல் ஆங்கிலத்தையும் துணை நிர்வாக மொழியாக பயன்படுத்த சட்டரீதி யில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும்.

• ஒன்றிய பணிகளுக்கான தேர்வுகளில் இந்தி, ஆங்கிலத்துடன் தமிழ் உள்ளிட்ட அனை த்து தேசிய மொழிகளையும் அங்கீகரிக்க வேண்டும்.

• மாநிலங்களில் உள்ள ஒன்றிய அரசாங்க அலு வலகங்களில் அஞ்சல், பண அஞ்சல், பதிவுப் பணிகளில் (மக்கள் புழங்கும் சேவைகளில்) தமிழை பயன்படுத்த உறுதியான நடவடிக்கை கள் தேவை. இப்போதுவரை தொடர்ந்துவரும் பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வினைக் கொடுக்கும் முழக்கங்களாக இவை உள்ளன.

திசை வழிகாட்டி

விடுதலையின் போது, நாட்டுப் பிரிவினை யால்‌ ஏற்பட்ட துயரங்களின்‌ காரணமாகவே இந்திய அரசியல்‌ அமைப்பில் அதிக அதிகாரம்‌ ஒன்றிய அரசிடம் சேர்க்கப்பட்டது என்று‌ இ.எம். எஸ்‌ நம்பூதிரிபாட் குறிப்பிட்டார்.‌ இந்திய அரசமைப்பின் அடிநாதமாக‌ இருப்பது அதன் கூட்டாட்சி கோட்பாடே ஆகும். இப்போது‌ இந்தி யாவின் தேவை அதிகாரப் பரவல்,‌ முழுமை யான‌ ஜனநாயகமே. ஆனால் அடுத்தடுத்து வந்த ஆட்சிகள் ஒன்றிய அரசிடம் ஆதிகாரத்தை குவிப்பதில் ஆர்வம் காட்டின.‌ இப்போது பாஜக/ஆர்.எஸ்.எஸ் ஒன்றிய அரசாங்கம், மாநி லங்களையே நொறுக்கி அழிக்க நினைக்கிறது. அனைத்து அதிகாரங்களையும் தன் வசமே‌ குவிக்க முயல்கிறது. இந்த‌ப் போக்கிற்கு‌ அணை போட வேண்டும். மொழிவழி‌ மாநிலங்களை‌ வலுப்படுத்தி, அனைத்து மொழிகளுக்கும் சமமான முன்னுரி மை, தாய்மொழிகளுக்கு ஊக்கம், தாய் மொழியில் நிர்வாகம், அனைத்து மக்க ளுக்கும் அதிகாரம் என்ற திசையில்‌ போராட்ட ங்கள் வலுப்படுவதே இன்றைய ‘ஒற்றை ஆட்சி’ கூட்டத்துக்கு சாவுமணி அடிப்பதாக இருக்கும். தமிழ் நாடு நாள் அந்த நம்பிக்கை யை தந்து வழிகாட்டி நிற்கிறது.