திண்டிவனம்,ஏப்.5- திண்டிவனம் வட்டம் பெலாக்குப்பம் ஊராட்சியிலுள்ள சிப்காட் தொழிற் பூங்கா வளாகத்தில் ரூ.500 கோடி முதலீட்டில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இதன் தொடக்கவிழா செவ்வாய்க்கிழமையன்று (ஏப்.5) நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், பெலாக்குப்பம் சிப்காட் தொழிற் மையத்திற்கு 634.42 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு தொழில் முனைவோருக்கு அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் வழங்கிடும் வகையில் தயார்படுத்தப் பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, லோட்டஸ் புட்வேர் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறு வனத்தின் துணை நிறுவனமான செய்யார் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தொழிற்சாலை அமைக்க 167.41 ஏக்கர் இடம் வழங்கப்பட்டுள்ளது. அங்கு ரூ.500 கோடியில் தொழில் தொடங்க உள்ளது. இதன் மூலம், இந்த பகுதியில் 6 ஆயிரம் பேருக்கு வேலைகிடைக்கும். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க.பொன்முடி, தங்கம், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.