states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் சுற்றுலா தளங்களில் அறை, வீடு வாடகை விடும் பிரபல  சர்வதேச நிறுவனமான ஏர்பிஎன்பி (Airbnb) நிறுவனம் ஒரே வாரத்தில் 30% ஊழியர்களை பணிநீக்கம் செய்துள் ளது. கடந்த ஆண்டு நல்ல வருமானம்  ஈட்டிய சர்வதேச நிறுவனங்களின் பட்டியலில் ஏர்பிஎன்பி இடம்பிடித்தும் ஏன் ஊழியர்களை வெளியேற்றியுள்ளது. கொரோனா காலத்தில் ஏர்பிஎன்பி 25% ஊழியர்களை நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) தலைமையிலான கூட்டமைப்பிலிருந்து உள்நாட்டு உபகரணங்களைப் பெற்று வரும் ஏப்ரல் மாதத்தில் வணிகரீதியாக 4ஜி சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்.

உலகச் செய்திகள்

பெரும் நிலநடுக்கங்களால் நிலைகுலைந்து போயுள்ள துருக்கியில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உதவும் வகையில், அந்நாட்டிற்கு ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 50 லட்சம் யென் வழங்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள துருக்கியின் தூதரிடம் இந்தத் தொகையை ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மியாமோட்டோ டகேஷ் அளித்தார். இந்தப் பெரும் சேதம் எங்கள் நாட்டில் ஏற்பட்டது போலவே நாங்கள் உணர்கிறோம் என்று மியாமோட்டோ தூதரிடம் தெரிவித்தார்.

பழங்காலத்து வட்டி விகிதத்தை விதித்தும், எரிபொருள் விலையைக் கடுமையாக உயர்த்தியும் ஏழை நாடுகளின் கழுத்தை நெரிக்கும் பணக்கார நாடுகளுக்கு கடும் கண்டனத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். இது திட்டமிட்டே நடப்பதால், பாதிக்கப்பட்டுள்ள சுமார் 40 ஏழை நாடுகளுக்கு பணக்கார நாடுகள் நிதியுதவியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

போர்க் குற்றங்களுக்குத் துணை போனதற்காக அமெரிக்காவின் முன்னணி ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்கள் மீது வழக்குத் தொடுக்க ஏமன் குடிமக்கள் பலர் முடிவெடுத்திருக்கிறார்கள். அமெரிக்க நீதிமன்றங்களிலேயே இந்த வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ரேதியான், லாக்ஹீடு மார்ட்டின் மற்றும் ஜெனரல் டைனமிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீது சவூதி அரேபியாவின் போர்க்குற்றங்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தீக்கதிர் விரைவு செய்திகள்

 

சென்னை உயர்நீதிமன்றத்தில்  5 நீதிபதிகள் பதவி ஏற்பு

சென்னை,மார்ச் 6- சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக  இருந்து வந்த எஸ்.ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக்,  ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோ பரில் குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.  இந்த நிலையில் உச்சநீதிமன்றத் தின் பரிந்துரையை ஏற்று, கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்துவரும் 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி 5 கூடுதல் நீதிபதிகளும், நிரந் தர நீதிபதிகளாக திங்களன்று (மார்ச் 6)  பதவி ஏற்றுக்கொண்டனர்.  சென்னை உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மழைக்கு வாய்ப்பு

சென்னை, மார்ச் 6- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 7அன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 8, 9 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயி லாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங் கள், அதையொட்டிய மாவட்டங்கள்  மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசான அல்லதுமிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் தெரிவித் திருக்கிறார்.

ஏடிஎம் கொள்ளையில் 5 ஆவது குற்றவாளி கைது 

திருவண்ணாமலை, மார்ச் 6- திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் 5ஆவது குற்றவாளியைக் கைது செய்த காவல்துறையினர், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத் தில் 4 ஏடிஎம் இயந்திரங்களை பிப்ரவரி 12 அன்று கேஸ் வெல்டிங்  இயந்திரம் மூலம் உடைத்து ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600  ரொக்க பணத்தை கொள்ளை யடித்துச் சென்றனர்.  இந்த வழக்கில் அரியானா வின் முகமது ஆரிப் (35), ஆஜாத் (37) கர்நாடகாவின் பாஷா (43), அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த அப்சர் உசேன் (26) ஆகிய நான்கு பேரையும் தனிப்படை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவர்களை போலீஸ் காவலில் எடுத்தும் விசாரணை செய்தனர். இந்த நிலையில், இவ்வழக் கில் தொடர்புடைய 5ஆவது நபரான கர்நாடக மாநிலம், கோலா ரைச் சேர்ந்த நிஜாமுதீன் (37) என்பவரை கைது செய்து திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து குற்றவியல் நடுவர் நீதி மன்ற நீதிபதி கவியரசன் முன்பு  ஆஜர்படுத்தினர். 15 நாள் சிறை யில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும்,  நிஜாமுதீனிடமிருந்து ஆந்திர  மாநில பதிவு எண் கொண்ட காரை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மாணவிகளுக்கு மீண்டும் தடை: ஆப்கனில் அவலம்

காபூல், மார்ச் 6- வரும் கல்வியாண்டிலும் ஆண் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி அளிக்கப்படும் என்று ஆப்கானிஸ்தானை நிர்வகிக்கும் தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது. புதிய கல்வியாண்டு தொடங்குகிறது என்று ஆப்கானிஸ்தானின் உயர்கல்வித்துறை அண்மையில் அறிவித்தது. இந்தப் புதிய கல்வியாண்டில் ஆண் மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். மார்ச் 6 ஆம் தேதி புதிய கல்வியாண்டு தொடங்குகிறது. மாணவிகள் சேர்க்கை பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. பெரும்பாலான மக்கள் பெண்களுக்குக் கல்வி என்பதை விரும்புகிறார்கள். உயர்க் கல்வி மற்றும் பல்கலைக்கழகங்களில் தங்களைச் சேர்த்துக் கொள்ள முடியாது என்று நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பால் மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கோடிக்கணக்கான மாணவிகளுக்கு கல்வி கிடைக்காததால் அவர்களின் வருங்காலம் மற்றும் நாட்டின் வருங்காலம் கேள்விக்குறியாகும் வாய்ப்புள்ளதாக அவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 2021 ஆம் ஆண்டில் தலிபானின் நிர்வாகம் பொறுப்பேற்றதில் இருந்து மாணவிகள் கல்வி நிலையங்களுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. முதலில் உயர்நிலைப் பள்ளிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. பின்னர், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகளுக்குத் தடை வந்தது. இது தற்காலிகமானதுதான் என்று நிர்வாகம் கூறியுள்ளது. இது நிரந்தரமானதல்ல என்றுதான் மக்களும் நம்புகிறார்கள். வெகுவிரைவில் பள்ளிகளும், கல்லூரிகளும் மாணவிகளுக்காகத் திறக்கப்படும் என்று விரும்புகிறார்கள். ஆனால், தடை எப்போது விலகும் என்ற வினாவுக்கு விடை இதுவரையில் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.