வாஷிங்டன், ஜூன் 8- ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான போர் நெருக்கடியால் அமெரிக்காவின் ஆயுத உற்பத்தியாளர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். உக்ரைனைத் தூண்டிவிட்டு, ரஷ்யாவுடன் மோதலை உருவாக்கிய அமெரிக்கா, தன் நாட்டில் உள்ள ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறது. போர் துவங்கி 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், இரு நாடுகளிலும் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இந்தப் போரில் ஒரு வெற்றியாளர் என்றால், அது அமெரிக்காவில் உள்ள ஆயுத உற்பத்தி பகாசுர நிறுவனங்கள்தான் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். தனது ஐரோப்பிய கூட்டாளி நாடுகளை உக்ரைனுக்கு ஆயுதங்களைத் தருமாறு நிர்ப்பந்திப்பதில் அமெரிக்கா வெற்றி கண்டுள்ளது. அந்த ஆயுதங்களைத் தயாரிக்கும் பணியை அமெரிக்க நிறுவனங்களிடம் விட்டிருக்கிறார்கள்.
தனது நிதியின் மூலமும் உக்ரைனுக்கு ராணுவ உதவி செய்யப் போவதாகவும் அமெரிக்கா அறிவித்திருக்கிறது. 108 பீரங்கிகள், அவற்றைக் கொண்டு செல்ல 90 வாகனங்கள், 2 லட்சத்து 20 ஆயிரம் குண்டுகள் மற்றும் 121 ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை ஏற்கனவே அமெரிக்கா வழங்கியிருக்கிறது. அடுத்தகட்டமாக, நீண்ட தொலைவுக்கு சென்று தாக்கக்கூடிய ராக்கெட்டுகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கப் போகிறது. இதற்கான நிதியை அமெரிக்க மக்கள் தலையில் கட்டப்போகிறார்கள்.
இந்த நிதியைக் கொண்டு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் பணியும் பகாசுர நிறுவனங்களுக்கே தருகிறார்கள். மேலும், 20 மி-17 ரக ஹெலிகாப்டர்கள், 1,400 விமான எதிர்ப்பு கட்டமைப்புகள், 6 ஆயிரத்து 500 பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை வழங்க அமெரிக்கா உறுதியளித்திருக்கிறது. பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் மற்றும் துர்க்கியே ஆகியவையும் ஏராளமான ஆயுதங்களை வழங்கியுள்ளன. மேலும் தரப்போகிறார்கள். இவையனைத்தும் அமெரிக்க பகாசுர நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் உற்சாகமாயிருக்கிறது. ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி கிராக்கியை உருவாக்கியிருப்பதாகக் கூறியிருக்கிறது. குறிப்பாக, தனது ஏவுகணை எதிர்ப்பு கருவிகளுக்கு உலகம் முழுவதும் இருந்து ஆர்டர்கள் குவிந்திருப்பதைத் தெரிவித்து மகிழ்கிறார்கள்.