states

ஊரின் பெயர், பேருந்து நிலைய பெயரை மாற்றுவது அரசின் கொள்கை முடிவு

மதுரை, ஜூன் 7-   ஊரின் பெயரை மாற்றுவது, பேருந்து நிலைய பெயரை மாற்றுவது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது என்றும் பேருந்து நிலைய பெயரை மாற்றக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க இயலாது என்றும் தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, துவரங்குறிச்சி  பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றக்கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. திருச்சி துவரங்குறிச்சியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,  “துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சியின் பேருந்து நிலையம் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக காமராஜர் பேருந்து நிலையம் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதி மக்களின் அனைத்து ஆவணங்களிலும் காமராஜர் பேருந்து நிலையம் என்றே உள்ளது. பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றக்கூடாது எனவும், காமராஜர் பேருந்து நிலையம் என்றே தொடரவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கை செவ்வாயன்று விசாரித்த  நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆனந்தி அமர்வு,  ஊரின் பெயரை மாற்றுவது, பேருந்து நிலைய பெயரை மாற்றுவது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. பேருந்து நிலைய பெயரை மாற்றக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது. மெட்ராஸ், சென்னை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்டோம். மாற்றங்களை ஏற்கப் பழக வேண்டும்” என்று குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.