சென்னை, ஜூன் 19- திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் தொடர் வெற்றிகளை பெற்று வருகிறார். 2021 தேர்தலில் முதலமைச்சராகவும் பதவியேற்றார். நான்காண்டு பதவிக்காலம் முடிந்து, அடுத்தாண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மொத்தமுள்ள 234 இடங்களில் 200 இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில், அதற்கேற்ப, ‘உடன்பிறப்பே வா’ என்ற நிகழ்ச்சி மூலம், இப்போதிருந்தே தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார். மறுபுறத்தில் அரசின் திட்டப்பணிகளையும் தீவிரமாக முடுக்கி விட்டுள்ளார். அதற்காக துறை ரீதியான ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். திமுகவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் அவரவர் தொகுதியில் முகாமிட்டு பணியாற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளார். அதனடிப்படையில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தத்தமது தொகுதியில் முகாமிட்டு உள்ளனர். கடந்த காலங்களில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அமைச்சர்கள் சென்னை கோட்டை அலுவலகத்தில்தான் இருப்பார்கள். வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் தொகுதிகளில் இருப்பார்கள். ஆனால், இப்போது வார நாட்களிலும் தொகுதிகளில் தான் இருக்கிறார்கள். முதலமைச்சரின் ஆய்வு மற்றும் முக்கிய கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக தான் சென்னையில் இருக்கிறார்கள். மற்றபடி தொகுதியில் இருந்து அரசின் திட்டப்பணிகளை விரைவுப்படுத்தி வருகிறார்கள். மேலும் மக்களின் குறைகளை கேட்டும், அதனை நிவர்த்தி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.