states

காய்ச்சல் உள்ளவர்கள் 3 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்:

தூத்துக்குடி, செப்.23- பருவநிலை மாற்றத்தால் தற்போது காய்ச்சல் ஏற்படுபவர்கள் 3 நாட்கள், 4 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முடிவுற்ற கட்டடப்பணிகளை திறந்து வைப்பதற்காக அமைச்சர் மா. சுப்பிரமணியன் விமானம் மூலம் வெள்ளியன்று காலை தூத்துக்குடி வந்தார்.  விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 3 நாட்கள் இருக்கும் இந்த காய்ச்சலானது பருவநிலை மாற்றத் தால் மட்டுமே ஏற்படுகிறது என்றாலும் இந்த காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் ஏற்படுபவர்கள் 3 நாட்கள், 4 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது. எந்தெந்த பகுதியில் 3 பேருக்கு அதிகமான நபர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதோ அந்த இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் வியாழன் முதல் நடத்தப்பட்டு வருகிறது.  இந்த மாதம் 30-ஆம் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசிகள் இலவசம் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பின்படி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வருகிற 25-ஆம் தேதி 50 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார சுகாதார நிலையங்கள் என 1,133 மருத்துவமையங்களில் வருகிற புதன்கிழமை தடுப்பூசி போடும் பணி நடைபெறும். 14 முதல் 17 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு வருகிற 4-ஆம் தேதி பள்ளிகளில் சென்று தடுப்பூசி செலுத்தப்படும். தமிழகத்தில் 96 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 91 சதவீதம் பேருக்கு 2-ஆம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.  தமிழகத்தில் மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த 4,308 காலி பணியிடங்கள் உள்ளன. அவை அனைத்தும் 2 மாதத்திற்குள் முழுமை யாக நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

;