சென்னை, மே 23- சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 4 நீதி பதிகள் பதவியேற்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது 60 நீதிபதிகள் பணி யாற்றி வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.சக்தி வேல், சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால், சென்னை தொழிலாளர் நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.குமரப்பன், கோவை மாவட்ட முதன்மை நீதிபதி கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்தார். இவர்கள் அனைவருக்கும் செவ்வா யன்று (மே 24) சென்னை உயர்நீதி மன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக 4 நீதிபதிகள் நியமிக்கப் பட்டுள்ளதால் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 11-ஆக குறைந்துள்ளது. 1973 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கரூர் மாவட்டம், வாங்கலையில் பிறந்தவர் நீதிபதி சக்திவேல் . இவர் திருச்சி சட்டக் கல்லூரியில் படிப்பை முடித்து, 1998 இல் பார் கவுன்சிலில் பதிவு செய்தார். 2011 இல் மாவட்ட நீதிபதியாக நேரடியாக தேர்வு பெற்றார். உயர் நீதிமன்ற தலைமை பதிவாளராக பதவி வகித் துள்ளார். 1974ஆம் ஆண்டு மார்ச் மாதம், கரூர் மாவட்டம், தொரங்கல்பட்டி அருகில் உள்ள ஜல்லிவடநாயக்கன் புதூரில் பிறந்த தனபாலும் திருச்சி சட்டக் கல்லூரியில் படிப்பு முடித்தவர். 2011 இல் மாவட்ட நீதிபதியாக நேரடியாக தேர்வு பெற்றார். தற்போது, உயர் நீதி மன்ற தலைமை பதிவாளராக உள்ளார். சிவகங்கை மாவட்டம், பிரான் மலையைச் சேர்ந்த நீதிபதி குமரப்பன் 1972 ஜூலையில் பிறந்தார். கோவை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு முடித்து, 1996 இல் பார் கவுன்சிலில் பதிவு செய்தார். மாவட்ட நீதிபதியாக, 2011 இல் நேரடியாக தேர்வு பெற்றார். 2018 முதல் 2021 வரை, உயர் நீதி மன்ற தலைமை பதிவாளராக பதவி வகித்தார். இதேபோல் நீதிபதி ராஜசேகரும் கடந்த 1998ல் வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்தார். 2011ல், மாவட்ட நீதிபதியாக நேரடியாக தேர்வு பெற்றார். மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலாளராக பதவி வகித்துள்ளார்.