states

‘இந்தியர்கள் இந்தியிலேயே பேச வேண்டும்!’

புதுதில்லி, ஏப். 8 - இந்திய ஒருமைப்பாட்டின் ஒரு முக்கிய அங்கமாக இந்தி மொழியை மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டது என்றும், வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இந்திய மக்கள் தங்களுக்குள் இந்தியிலேயே பேசிக் கொள்ள வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘உத்தரவு’ போட்டுள்ளார். ஒன்றிய பாஜக அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்கள் துவங்கி மகாராஷ்டிராவிலும் கூட இந்தித் திணிப்புக்கு எதிராக மக்கள் அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  மேலும், இந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள், நாடாளுமன்றத்திலும் இந்தித் திணிப்புக்கு எதிராக குரலெழுப்பி வருகின்றனர். எனினும், இந்தித் திணிப்பை மோடி அரசு நிறுத்து வதாக இல்லை.  இந்நிலையில்தான், மாநிலங்களில் வசிக்கும் மக்கள், பிற மாநில மக்களைத் தொடர்பு கொள்வதில் இந்தி யையே பயன்படுத்த வேண்டும்; ஆங்கிலத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். நாடாளுமன்ற அலுவல் மொழிக் கமிட்டி-யின் 37-வது கூட்டம், புது தில்லியில் நடைபெற்ற நிலையில், கமிட்டியின் தலைவர் என்ற வகையில், இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்து அமித்ஷா உரையாற்றியுள்ளார்.

அப்போது இதுதொடர்பாக அவர் மேலும் பேசியிருப்பதாவது: அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கு நேரம் வந்துவிட்டது. ஆட்சியை நடத்தும் ஊடகம் அலுவல் மொழிதான் என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். எனவே, உள்ளூர் மொழி களுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத் திற்கு மாற்றாக இந்தி மொழியை மக்கள் ஏற்க வேண்டும்.  வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது அது பிராந்தியமாக இருந்தாலும் அல்லது மாநிலம் சார்ந்ததாக இருந்தாலும் அது இந்தி யாவின் மொழியில் இருக்க வேண்டும்.  தற்போதைய அலுவல் மொழிக் குழு செயல்படும் வேகம் இதற்கு முன்பு இருந்தது இல்லை. இந்தக் குழுவின் ஒரே பதவிக்காலத்தில் மூன்று அறிக்கைகளை இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது அனை வரின் கூட்டுச் சாதனையாகும். தற்போது அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கிலுள்ள எட்டு மாநி லங்களில் 22 ஆயிரம் இந்தி ஆசிரி யர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், வடகிழக்கில் ஒன்பது பழங்குடியின சமூகத்தினர் தங்கள் பேச்சுவழக்குகளின் எழுத்துகளை தேவநாகரிக்கு மாற்றியுள்ளனர். இது தவிர, வடகிழக்கு மாநிலங்கள் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்க ஒப்புக் கொண்டுள்ளனர். 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் இந்தி கற்பித்தல் தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்தி பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தை களை ஏற்று இந்தி மொழியை எளிமை யாக மாற்றாத வரையில் அது பரப்பப்படாது. எனவே, இந்தி அகராதியைத் திருத்தி மீண்டும் வெளியிட வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசியுள்ளார்.  ஒன்றிய உள்துறை இணை அமைச்சர்கள் அஜய் குமார் மிஸ்ரா மற்றும் நிஷித் பிராமணிக், அலுவல் மொழி நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் பர்த்ருஹரி மஹ்தாப் மற்றும் குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதனிடையே, அமித்ஷாவின் பேச்சைத் தொடர்ந்து, இந்தியைத் திணிக்க நினைத்தால் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடிக்கும் என்று கூறி சமூக வலைதளங்களில், ‘#இந்திவேண்டாம்_போடா #StopHindiImposition’ என்று போன்ற முழக்கங்கள் டிரெண்ட் ஆகத் துவங்கி யுள்ளன. “இந்தித் திணிப்பானது, இந்தியாவின் பன்முகத்தன்மை மீது நடத்தப்படும் தாக்குதல்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள் ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களின் கண்டனத்தை வெளி யிட்டுள்ளன.