ஜெனீவா,ஜூன் 12- புகையிலை, அதிபதப்படுத்தப்பட்ட உணவுகள், புதைபடிவ எரிபொருள், மது உற்பத்தி செய்யும் நிறுவனங்களால் ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் 27 லட்சம் மக்கள் பலியாகி வருவதாக உலக சுகாதார அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மேலும் மக்களின் நலனுக்கு ஏற்ற வகையில் அந் நிறுவனங்களை கட்டுப்படுத்த அரசுகள் சில சட்டங்களை கொண்டு வர முயற்சித்தால் அவற்றின் லாபம் பாதிக்கப்படும் என இந்நிறுவனங்கள் அரசின் மீது ஆதிக்கம் செலுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பியப் பிரிவு இயக்குநர் ஹான்ஸ் க்ளூக், இது குறித்து பேசிய போது “எப்போதும் லாபத்தை விட மக்களுக்கே முன் னுரிமை கொடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள் ளார். அத்துடன் மத்திய ஆசியா உள்ளிட்ட 53 நாடு களில் கணக்கெடுக்கப்பட்டதில் இந்த நான்கு தொழில் நிறுவனங்களால் ஐரோப்பிய நாடுகளில் ஒவ் வொரு நாளும் குறைந்தபட்சம் 7,000 பேர் பலி யாகின்றனர் என்றார். குறிப்பாக இந்த தொழில் துறைகளை சிறிய எண்ணிக்கையிலான பன்னாட்டு நிறுவனங்களாக ஒருங்கிணைத்ததன் காரணமாக அவை தங்கள் பணபலத்தை பயன்படுத்தி அரசின் மீது ஆதிக்கம் செய்வதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட் டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் இந்த தொழில் துறை நிறுவனங்கள் லாபத்தை மட்டும் உயர்த் தும் நோக்கத்துடன் நுகர்வோரை தவறாக வழி நடத்துவது, அவர்களைச் சுரண்டுவது, அந்நிறுவன தயாரிப்புகள் குறித்த தரம், வெளிப்படைத் தன்மை, நிறுவனங்களின் சுற்றுச்சூழல் சான்றுகளில் ஏமாற்று வேலை செய்வது என பல தந்திரங்களைப் பின்பற்றுகின்றன என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த தந்திரங்கள் இவ்வளவு நாள் உருவாக் கப்பட்ட பொது சுகாதாரக் கட்டமைப்பிற்கு அச்சுறுத் தலை உருவாக்குகின்றன. மேலும் ஐரோப்பிய நாடு கள் தங்கள் சுகாதார இலக்குகளை அடைவதை நோக்கிச் செல்வதை தடுக்கின்றது. மேலும் இத்த கைய தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்கிற பொருட்களால் மக்களுக்கு ஏற்படுகிற இருதய நோய், புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட நோய்களை முன்கூட்டியே தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைக ளுக்கு இந்த நிறுவனங்கள் அரசின் மீது செலுத்தும் ஆதிக்கம் தடையாக உள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ஐரோப்பாவில் வயது வந்தவர்களில் கிட்டத் தட்ட 60 சதவீதமும், மூன்றில் ஒரு பங்கு குழந்தைக ளும் அதிக எடை அல்லது பருமனாக உள்ளனர் எனவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.அதனுடன் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தரவு கள் அடைப்படையில் ஐரோப்பாவில் இருதய நோய் மற்றும் புற்றுநோயால் ஏற்பட்டு வரும் ஐந்து மரணத்தில் ஒரு மரணம் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தின் விளைவால் ஏற்படுகிறது என தெரிய வந்தது. ஆரோக்கியமற்ற பொருட்களின் விற்பனை, ஏகபோக நடைமுறைகள் ,அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்துவதை கட்டுப்படுத்தும் வகையில் வலுவான சட்ட விதிமுறைகளை அமல்படுத்துவதன் மூலம் இந்த மரணத்திற்கு எதிராகப் போராடுமாறு ஐரோப்பிய நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.