states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தீய தத்துவத்தின் பிரதிநிதிதான் திரௌபதி முர்மு...

இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு, ஜூலை 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு வேட்பா ளராக நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்கா களமிறங்கியுள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் அஜோய் குமார் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “யஷ்வந்த் சின்ஹா சிறந்த வேட்பாளர். திரௌபதி முர்முவும் சிறந்த நபர்தான். ஆனால், இந்தியாவின் தீய தத்துவத்தின் பிரதிநிதியாக திரௌபதி முர்மு முன்னிறுத்தப்படுகிறார். நாம் திரௌபதி முர்முவை பழங்குடியினர்களின் அடை யாளமாக பார்க்கக்கூடாது” என்று கூறியுள்ளார். “ராம்நாத் கோவிந்த் தற்போது குடியரசுத் தலைவ ராக உள்ளார். ஆனாலும், பட்டியல் வகுப்பினர் மீது தாக்குதல்கள் நடைபெறுகிறது. இதனை மறைத்து மோடி அரசு மக்களை முட்டாளாக்குகிறது” என்றும் அஜோய் குமார் விமர்சித்துள்ளார்.

வடமாநிலங்களில் வெள்ளம்; நீட் தேர்வு ஒத்திவைப்பு?

குஜராத், அசாம், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மற்றும் மத்திய மாநிலங்களில் பெய்து வரும் பருவமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ‘நீட்’ தேர்வு நடை பெறும் தேர்வு மையங்களும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால், தேர்வுகளை ஏற்கெனவே  அந்தந்த மாநில அரசுகள் ஒத்திவைத்துள்ளன. இந்நிலையில், ஜூலை 17-ஆம் தேதி நடைபெற உள்ள மருத்துவக் கல்வி மாணவர்களுக்கான இளநிலை நுழைவு தேர்வை (நீட்) மழை வெள்ளத்தை அடிப்படையாக் கொண்டு ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வட மாநில மாணவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்களை 17-ஆம் தேதிக்கு முன்பாக அவசர  வழக்காக பட்டியலிட்டு விசாரிக்கும்படி, தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஹீமா கோலி அமர்வில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று 17-ஆம் தேதிக்கு முன்பாகவே நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகவத் கீதை கட்டாயம்: தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

குஜராத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2022-2023 கல்வியாண்டில் பகவத் கீதை பாடம்  கட்டாயம் என்று, குஜராத் கல்வித் துறை கடந்த மார்ச் 17-ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. குஜராத் கல்வித்துறையின் இந்த அறிக்கை யானது தேசியக் கல்விக் கொள்கை 2020-க்கு எதிரானது என்று கூறி ஜம்மியத் உலமாக் இ ஹிந்த்  குஜராத் மற்றும் ஜம்மியத் உலமா நல அறக்கட்டளையும் இணைந்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மிஹிர் ஜோஷி, அரசின் கொள்கை முடிவானது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 25 மற்றும் 51ஏ (எப்)-பிற்கு எதிரானது என்று வாதிட்டார். எனினும், குஜராத் அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதிக்க மறுத்து விட்ட குஜராத் உயர்நீதிமன்றம், எனினும் இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு குஜராத் அரசுக்கு உத்தர விட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

பாஜக ஆளும் கர்நாடகத்தில் கோமாதா கூட்டுறவு சங்கம்

“பசு மாடுகளின் கோமியம் மற்றும் சாணத்தில் இருந்து சோப்பு, சேம்பு, அலங்கார பொருட்கள்  என பல்வேறு வகையான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கு நமது மாநிலத்தில் உள்ள கோசாலைகளே சாட்சி. இத்தகைய பசுக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்டத்திற்கு ஒரு கோசாலை அமைக்கப்பட்டுள்ளது. தனியார் கோசாலைகளில் பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அத்துடன் அவற்றின் கழிவுகளில் இருந்து துணை பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இந்த பொருட்களை விற்பனை செய்ய சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கத்தில் கோமாதா கூட்டுறவு சங்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கர்நாடக கால்நடைத்துறை அமைச்சர் பிரபு சவான் கூறியுள்ளார்.

அக்னிபாதைக்கு எதிரான வழக்கில் நாளை விசாரணை

ராணுவத்திற்கு நான்காண்டு காண்ட்ராக்ட் அடிப்படையில் ஆளெடுக்கும் மோடி அரசின் ‘அக்னிபாதை’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், மேற்கு  வங்கம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தி னர். சில இடங்களில் ரயில் எரிப்பு சம்பவங்களும், வன்முறைகளும் அரங்கேறின. இதனிடையே,  அக்னிபாதைத் திட்டத்தை திரும்பப் பெற ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமானோர் பொதுநல மனுக்களையும்  தாக்கல் செய்தனர். இந்நிலையில் அக்னிபாதைத் திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழ மையன்று (ஜூலை 15-ஆம் தேதி) விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

முதல்வருக்கு சூடான தேநீர் தராத அதிகாரிக்கு நோட்டீஸ்!

மத்தியப் பிரதேச பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தேர்தல் பிரச்சாரத்திற்காக கஜூராஹோ  விமான நிலையத்திலிருந்து ரேவா-வுக்கு சென்றார். அப்போது கஜூராஹோ விமான நிலை யத்தில் அவருக்கு வழங்கப்பட்ட  தேநீர் சூடாக இல்லை என தெரிகிறது. இதையடுத்து, தரமற்ற உணவு  மற்றும் தேநீரை ஏற்பாடு செய்த உணவு விநியோக அதிகாரி ராகேஷ் கன்ஹூவாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்ததையடுத்து, அந்த நோட்டீஸ் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.”மக்களுக்கு ரேஷன் கிடைக்காமல் போகலாம், ஆம்புலன்ஸ் கிடைக்காமல் போகலாம், ஆனால் முதலமைச்சர் குளிர்ந்த தேநீரை மட்டும் குடித்து விடக்கூடாது” என்று சவுகானை, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா விமர்சித்துள்ளார்.

ராமர் பாலம்: உச்சநீதிமன்றம் விசாரிக்க ஒப்புதல்!

தமிழ்நாட்டின் உள்ள இராமேஸ்வரத்திற்கும் இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே இயற்கையாக அமைந்த மண்திட்டை, இதிகாசத்தில் வரும் ராமர் இலங்கைக்கு செல்வ தற்காக கட்டிய பாலம் என்று சங்-பரிவாரங்கள் கூறி வருகின்றன. இந்த நீரிணைப் பகுதிக்கு ராமர் பாலம் என்றும் பெயர் சூட்டிய அவர்கள், இதனை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் சுப்பிரமணியசாமியின் மனுவை ஜூலை 26-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

செஸ் ஒலிம்பியாட்: பிரதமர் மோடி சென்னை வருகிறார்

மாமல்லபுரம், ஜூலை 13- மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச “செஸ் ஒலிம்பியாட்” போட்டி வருகிற 28 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம்  1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள “போர்  பாயிண்ட்ஸ்” அரங்கத்தில் பிரம் மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதில் 188 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர் இந்நிலையில், நேரு விளையாட்ட ரங்கில் நடைபெற இருக்கும் செஸ்  ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர்  மோடி கலந்து கொள்கிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி ஜூலை 28 ஆம்தேதி சென்னை வருகிறார். 44-வது செஸ் ஒலிம்பி யாட் போட்டியின் தொடக்க விழாவில், பிரதமர் மோடி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

முதலமைச்சர் விரைவில் குணமடைய வேண்டும்: ஆளுநர் ரவி

சென்னை, ஜூலை 13- திமுக தலைவரும் தமிழ்நாடு முதல மைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை புறநகர் பகுதியான செம்மஞ் சேரி பகுதியில் மழை நீர் வெள்ளத்தடுப்பு பணிகளை நேரில் பார்வையிட்ட பிறகு மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடு கள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிக ளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.  இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. வீட்டுக்கு வந்ததும் உடனடி யாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி யானது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிமைப்படுத்திக் கொண்டார்.  இதனால் அவர் பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வீட்டில் அவர் நலமுடன் உள்ளதாகவும், விரைவில் பூரண குணமடைந்து விடுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டா லின் நல்ல ஆரோக்கியத்துடன் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ஜூலை 17 - அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

சென்னை,ஜூலை 13- அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் சிறப்பு பொதுக்குழு கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால  பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் வரும்  ஜூலை 17ஆம் தேதி அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டப்படுவதாக தலைமை அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பொரு ளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். அடுத்ததாக ஓ.பன்னீர் செல்வத்திடம் இருக்கும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை மாற்றுவதற்கு எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. மேலும் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதி முகவின் இடைக்கால பொதுச் செயலா ளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வான நிலையில் முதல் எம்எல்ஏக்கள் கூட்டம் கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள்

சென்னை,ஜூலை 13- நடந்து முடிந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில், கட்சி அடிப்படை யில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 30  ஆம் தேதி வரை பல்வேறு காரணங்க ளுக்காக காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இரண்டு மாவட்ட ஊராட்சி வார்டு  உறுப்பினர், 20 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 40 ஊராட்சி தலை வர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பி னர் என மொத்தம் 498 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதைத் தவிர்த்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி வார்டு உறுப்பினர், 2 நகராட்சி வார்டு  உறுப்பினர், 8 பேரூராட்சி வார்டு  உறுப்பினர் உள்ளிட்ட 510 பதவிக ளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 2 மாநகராட்சி வார்டு உறுப்பினர், ஒரு நகராட்சி வார்டு உறுப்பினர், 6 பேரூராட்சி வார்டு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 14 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பி னர்கள் பதவிகளில் 6 சுயேட்சை வேட் பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.