சென்னை,மே 9- மாவட்ட கண்காணிப்புக் குழுக்களுக்கு வழக்குகளை முடிப்பதற்கு அதிகாரம் இல்லை என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளதை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்றுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் படி அனைத்து மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் விதிகளை நடைமுறைப்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு திட்டங்கள் ஆகியவற்றை ஆய்வுசெய்து சட்டத்தின் செயல்பாட்டை உறுதிப்படுத்துவதற்கே இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் இக்குழு தான் நிறைவேற்ற வேண்டிய பணிகளை செய்வதற்கு மாறாக தனது அதிகார வரம்பிற்குள் வராத பணிகளைச் செய்கிறது. குறிப்பாக, பட்டியல் சாதியினர் கொடுக்கும் வன்கொடுமை புகார்கள் சிலவற்றை புகாரில் உண்மை இல்லை (Mistake of Fact) என்று காவல்துறை முடித்து விடுகிறது.
இவ்வாறு காவல்துறையினால் முடித்து வைக்கப்படுகிற வழக்குகளுக்கு கண்காணிப்புக் குழுவும் ஒப்புதல் அளித்து விடுகிறது.இவ்வாறு பல பத்தாண்டுகளாக நூற்றுக்கணக்கான வழக்குகள் அனைத்து மாவட்டங்களிலும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. தள்ளுபடியான வழக்குகளை மறுவிசாரணைக்கு உட்படுத்துக! காவல்துறை தள்ளுபடி செய்யும் வழக்குகளுக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம் கண்காணிப்புக் குழுக்களுக்கு இல்லை என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது.இது குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கும்,தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.இதே போன்ற கருத்தை 2022 நவம்பரில் மாநில எஸ்சி எஸ்டி ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் உடனடியாக இதனைக் கைவிட வேண்டும். இது வரை தள்ளுபடி செய்யப்பட்ட அனைத்து வன்கொடுமை வழக்குகளையும் மறுவிசாரணைக்கு உட்படுத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.