விவசாயம் நலிவுறும் காலங்களில் விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்திருப்பது பயிர் காப்பீடு தான். ஆனால் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்வதில் அண்மை காலங்களாக ஆர்வம் குறைந்து வருகிறது. மேட்டூர் அணை மூடப்பட்டுள்ளதாலும் போதிய மழை பெய்யாததாலும் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ளனர். வழக்கமான காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி என்பது ஏறத்தாழ 8 லட்சம் ஏக்கரில் நடைபெறும். ஆனால் தற்போதைய ஆண்டு அணை பாதியிலேயே மூடப்பட்டதாலும் விவசாயிகள் எதிர்பார்த்த அளவில் மழை இல்லாததாலும் சம்பா சாகுபடி பணிகளை தொடங்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் விவசாயிகள் உள்ளனர். பம்ப்ஷெட் வசதிகள் உள்ள ஒரு சில இடங்களில் மட்டும் நடவு பணிகளை தொடங்கியுள்ளனர்.
இதற்கிடை யில் இந்த ஆண்டு சம்பா சிறப்பு பருவத்தில் திருத்தியமைக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15 அன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காப்பீடு செய்வதற்கான ஆர்வம் குறைந்து வருவதை விவசாயிகள் மத்தியில் காண முடிகிறது. விவசாயிகளிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டால், பயிர் காப்பீடு செய்ய சிட்டா, அடங்கல் கேட்டு விண்ணப்பித்தால் பயிர்கள் முளைப்பதற்கு முன் அவற்றை வழங்குவதற்கு வருவாய்துறையினர் மறுத்து வருகின்றனர்; இதையெல்லாம் தாண்டி காப்பீடு செய்தால் உரிய இழப்பீடு கிடைப்பதில்லை. பயிர்க் காப்பீடு வழங்குவதிலும் ஏகப்பட்ட குளறுபடி கள் தொடர்கின்றன. விவசாயி களுடைய நிலங்களில் சோதனை அறுவடையை விவசாயிகள் முன்னிலையில் செய்வதில்லை. காப்பீடு நிறுவனங்கள் அவ்வாறு செய்யாமல் வேளாண் துறையின் அறிக்கையை பெற்று இழப்பீடு வழங்குகின்றனர். இதன் விளைவாக உரிய இழப்பீட்டு தொகை கிடைக்காமல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புலம்புகின்றனர். காப்பீடு நிறுவனங்களின் மீது விவசாயிகள் வைத்திருந்த நம்பிக்கையும் பொய்த்து விட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே குறுவை பருவத்தில் பயிரிட்டு தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்து மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.இந்த சூழலில் சம்பா பயிருக்குரிய காப்பீட்டு பிரீமியம் தொகையை தமிழ்நாடு அரசே செலுத்தி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. -ஆரூரான்