states

திருச்சி மாநகரில் சாதியின் பெயரில் உள்ள தெருக்களின் பெயரை மாற்ற வேண்டும் : சிபிஎம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 10 - திருச்சி மாநகரில் சாதியின் பெயரில் உள்ள தெருக்களின் பெயரை மாற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மாநகரில் உள்ள 65 வார்டுகளிலும் பல்வேறு தெருக்களுக்கு மனிதர்களை அவமதிக்கும் விதமாக இந்த 21 ஆவது நூற்றாண்டிலும் சாதியின் பெயரால் தெருக்கள் அழைக்கப்படுவதும் விளம்பரப் பலகை வைப்பதும் அரசு பதிவேட்டில் ஆவணங்களில் தற்போதும் செயல்பாட்டில் உள்ளது. உறையூரில் குறத்தெரு, காந்திபுரம் தாந்தோன்றிபுரத்தில் பறையர் தெரு, பாலக்கரையில் தோட்டி காலனி, சக்கிலியத்தெரு, எடமலைப்பட்டிபுதூரில் டோபி காலனி என்றும் ஆவணங்களில் இருக்கிறது.  ஸ்ரீரங்கத்தில் 1 ஆவது வார்டில் “நைட்சாயில் டெப்போடு ரோடு”- இதன் தமிழாக்கம் “மனித மலகிடங்கு சாலை” என்பதாகும் பல ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீரங்கம் பகுதியின் குடியிருப்புகளில் உள்ள கழிப்பறை என்பது “எடுப்பு கக்கூஸ்” என்று அழைக்கப்படும், மனித மலத்தை வீடுகளின் கழிவறைகளில் இருந்து எடுத்து,

அதை தூய்மைப் பணியாளர்கள் சுமந்து சென்று மலக்கிடங்கில் கொண்டு சேர்க்கும் மிக கொடூரப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்ததையே இது காட்டுகிறது. இதுபோன்று திருச்சி மாநகரில் தெருக்களின் பெயரால், சாதி ரீதியான இழிவு செய்யும் போக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பல்வேறு பொது நல அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்தும், சில இடங்களில் பெயர் மாற்றம் செய்து தெருவின் பெயர்ப் பலகை மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு ஆவணங்களில், வாக்காளர் பட்டியலில், குடும்ப அட்டை, ஆதார் கார்டுகளில் சாதியின் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் சமீபத்தில் மதுரை உயர் நீதிமன்றம்கூட திருச்சி மாநகரத் தெருக்களின் சாதி பெயர்களை மாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. எனவே தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உடனடியாக சாதி ரீதியாக பட்டியலின மக்களை அவமானப்படுத்தும் தெருக்களின் சாதிப் பெயர்களை அரசு ஆவணங்களிலும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அதனை அரசிதழில் வெளியிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

;