states

img

முற்போக்கு திசை வழியில் தொடர்ந்து பயணிக்க... - சு.பொ.அகத்தியலிங்கம்

மாபெரும் ஆளுமைகளை வாழும் காலத்தில் வாழ்த்துவதும் பாராட்டுவதும் கொண்டாடுவதும் பெருமைக்கு உரிய வாய்ப்பு. சிகரம் செந்தில்நாதனின் எண்பதாவது அகவையைக் கொண்டாட விழா எடுத்ததும்; அவரை போற்றும் இந்நூலைக் கொண்டுவந்ததும் பெருநிகழ்வே! நூலின் முதல் பகுதி வாழ்த்துச் செய்திகள். அதைத் தொடர்ந்து பல ஆளுமைகளின் கட்டுரைகள், அதன் பின் நூலின் இதயமான சிறப்பு நேர்காணல், சுவடுகள் என்கிற தலைப்பில் செந்தில்நாதன் பதித்த பல்வேறு முத்திரைகளை அவ்வப்போது பல ஆளுமைகள் நினைவுகூர்ந்தவை, நூல் மதிப்புரைகள் ,சுருக்கமான சொந்த வாழ்க்கைக் குறிப்பு, செந்தில்நாதனின் இதுவரையிலான படைப்புகள் பட்டியல் என ஏழு பகுதிகளாக இந்நூல் அமைந்துள்ளது.

செந்தில்நாதன் குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் பலரின் வாக்குமூலமாகவே இந்நூல் தொகுப்பு அமைந்துள்ளது பாராட்டத்தக்கது. அதிலும் தனிநபர் துதியாக இல்லாமல் படைப்பு சார்ந்தும் கருத்து சார்ந்துமே அவை பெரிதும் அமைந்திருப்பது தற்செயலானது அல்ல; செந்தில்நாதனின் வாழ்க்கைப் பாதையும் பயணமும் அத்தகையதே!  நூலின் இதயமாக அமைந்துள்ள சிறப்பு நேர்முகத்தை வாசிக்கும் முன் நேர்காணல் செய்த வே.குமரவேல் ஆரம்பத்தில் சொல்லிய வரிகள் முக்கியமானவை. ‘‘இந்த நேர்முகத்தை - கலந்துரையாடலை படிக்கும் நண்பர்களும் புதிய வாசகர்களும், திரு.சிகரம் செந்தில்நாதன் அவர்கள் முருகவேள் அவர்களுக்கு வழங்கிய நேர்காணல் புத்தகத்தை படித்த பிறகு இதனை வாசித்தால் ஓர் தெளிவான சித்திரம் கிடைக்கும். கூடவே சமகாலப் பிரச்சனைகள் பற்றி ச.செந்தில்நாதன் அவர்கள் பல இதழ்களில் பல நேரங்களில் வரைந்துள்ள கட்டுரைகள் ‘இலங்கை முருகனும் மலேசிய முருகனும்’ எனும் தலைப்பில் சந்தியா பதிப்பகத்தில் வெளிவந்துள்ளது. மேலும் ‘ நீதிமன்றமும் நானும்’ என்ற நூலும் இருக்கிறது. இந்த மூன்று நூல்களையும் படித்துவிட்டு பிறகு இந்த விரிவான நேர்காணலைப் படித்தால் அந்த வரிசைக் கிரமம் அவரது வாழ்க்கைப் பயணத்தைப் புரிந்துகொள்ள உதவும்’’.

ஆம். இந்த சிறப்பு நேர்காணல் முழுக்க முழுக்க கருத்துத் தளத்தில் பயணிக்கிறது. எனவே, அதனை ஒட்டி முழு புரிதலுக்கு மேற்கண்ட வழிகாட்டல் நியாயமானதே! ‘‘நான் சொல்வது மண்ணுக்கேற்ற மார்க்சியம் அல்ல; மண்ணைப் புரிந்து கொண்ட, மண் சார்ந்த மார்க்சியம்’’ என் இந்நேர்காணலிலும் அழுத்திச் சொல்கிறார் . நேர்காணலின் அழுத்தமும் அதை நோக்கியே அவர் கருத்தைச் சொல்வதாக அமைந்துள்ளது. திராவிட இயக்கம் குறித்த பார்வை, தமிழில் வழிபாடு குறித்த பார்வை, ஈழத் தமிழர் போராட்டம் குறித்த பார்வை, அரசியல் சாசனம் குறித்த பார்வை ,மாநில உரிமை தமிழ் தேசியம் குறித்த பார்வை என நீளும் இந்த நேர்காணல். இது அவரின் தொடர் எழுத்துகள், போராட்டங்கள் இவற்றின் தொடர்ச்சியே என்பதை அவரை தொடர்ந்து அவதானிக்கும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள முடியும்.

‘‘உரிமை வழக்கும் /குற்ற வழக்கும் போலவே /உலக வழக்கும் செய்யுள் வழக்கும்/முறையாய்க் கற்றவர்/சிக்கல் அற்றவர்’’…. எனவும், ‘‘நீதிமன்றத்துக்கு உள்ளேயும் /நீதிமன்றத்துக்கு வெளியேயும் வாதாடும் / ‘புதிய மன்றாடி போலும்’ என்று /சேக்கிழார் தொடரை சிறிது மாற்றி /சிகரம் செந்தில்நாதனை / வாழ்த்தி மகிழ்கிறேன்’’ என செந்தில்நாதனின் உயிர் நண்பர் கவிஞர் ஈரோடு தமிழன்பன் வாழ்த்தியிருப்பது மிகை அல்ல. சு.சமுத்திரம் உயிரோடு இருந்திருந்தால் செந்தில்நாதனின் எண்பதாவது அகவை விழாவை எப்படி கொண்டாடித் தீர்த்திருப்பார்? தாம் தொடங்கிய ‘சிகரம்’ ஏட்டின் பெயராலேயே இன்றுவரை அறியப்படும் ச.செந்தில்நாதன் எனும் மாபெரும் ஆளுமையை தனிநபர் துதியின்றி கருத்துச் செறிவால் சித்தரித்துக் காட்டும் ‘‘சிகரம் செந்தில்நாதன்-பாதை-பயணம்-படைப்புலகம்’’ என்ற இந்நூலை ஊன்றி வாசிப்பீர்! விவாதிப்பீர்! தமிழ்நாடு முற்போக்கு திசைவழியில் தொடர்ந்து பயணிக்க தோள் கொடுப்பீர். தோழர் சிகரம் செந்தில்நாதன் வாழும் இக்காலத்தில் அவரோடு கை இணைந்து பயணித்தேன் எனும் பெருமிதத்தோடு அவர் நூற்றாண்டு காண வாழ்த்துகிறேன்.   

சிகரம் செந்தில்நாதன் - 
பாதை-பயணம்-படைப்புலகம்,
தொகுப்பாசிரியர் : வே.குமரவேல்,
வெளியீடு : சந்தியா பதிப்பகம், 
சென்னை -600040,
தொடர்புக்கு : 24896979 / 944471515, பக்கங்கள் : 428, விலை :ரூ.450/