1990ல் முழுநேர ஊழியராக கட்சி தலைமை என்னை ஏற்றுக் கொண்ட போது, வேலையின்மைக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழுவின் மாநில பிரச்சார பயணம் மாவட்டத்திற்குவந்தது. அதை தொடர்ந்து ஜூன் 9 சென்னை கடற்கரை பொதுக்கூட்டத்துடன் அந்த பிரச்சாரம் நிறைவு பெற்றது. மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து பணியாற்றிய மாவட்ட செயலாளர் தோழர். எஸ்.ஏ.பெருமாள், தொழிற்சங்க தோழர். எம்.என்.எஸ் மாவட்ட செயலாளர் எம். மீனாட்சி சுந்தரம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.சுப்புக்காளை, அலுவலக ஊழியர் கே. கிருஷ்ணன் மற்றும் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பொறுப்பில் நான், இதுதான் அந்த அலுவலகத்தின் ஊழியர் செயல்பாடாக இருந்தது. எம்.என்.எஸ். தவிர மற்ற அனைவரும் சென்னையில் நடந்த வேலையின்மை எதிர்ப்பு நடவடிக்கை குழுவின் பேரணிக்கு சென்று விட்டோம். ஜூன் 11 அன்று காலை 6 மணியளவில் அலுவலகம் வந்த போது, “வா கண்ணா, இத்தனை நாள் நான் மட்டுமே அலுவலகத்தில் இருந்தேன், நீ என்ன வேலை வைத்திருக்கிறாய்? இன்று அலுவலகம் இருந்து தகவல் தொடர்பை கவனித்துக் கொள்ள முடியுமா?” என்றார். நம்மிடம் இவ்வளவு எதிர் பார்க்கிறாரே என்ற நினைப்புடன், சம்மதம் தெரிவித்த பின்னர், அன்றைக்கு தான் வீட்டுக்குப் போவது மற்றும் மறுநாள் விவசாய சங்க வேலை ஒன்றை முடித்து விட்டு, அதற்கு மறுநாள் வர இருப்பதை தெரிவித்தார். அது மட்டுமல்ல, நோட்டு ஒன்றை எடுத்தார். அதில் யார் யாருக்கு என்ன தகவல் வந்தது, யார் தகவல் சொன்னது, அந்த தகவலின் பெயரில், சம்மந்தபட்ட தோழர் என்ன எதிர்வினை ஆற்ற வேண்டும் போன்ற விவரங்களை பதிவு செய்திருந்ததைக் காண்பித்தார். இதுபோல் நீ இருக்கும் நாள்களிலும் செய்ய வேண்டும் என்றதுடன், மற்றவர்களுக்கு எப்படி செய்திகளை கடத்த வேண்டும் என்பதையும் பயிற்றுவித்தார். செல்போன், மெயில், வேறுபல தகவல் தொடர்பு சாதனங்கள் வளர்ந்துவிட்ட நிலையிலும் கூட, பல தகவல்களை தவற விடுகிறோம். ஆனால் எம்.என்.எஸ் எழுதி வைத்து பிறருக்கு கடத்திய தகவல் தொடர்பு, ஒரு போதும் தவறியதில்லை.
புத்தக விற்பனைக்கு பழக்கியவர்
மாவட்டக் குழு அலுவலகத்தில் பிரசுர விற்பனைக்கு தோழர். எம்.என்.எஸ் பொறுப்பு எனத் தீர்மானிக்கப்பட்டு இருந்தது. என்னை ஊழியராக அங்கீகரித்த பின், ஒருநாள் எஸ்.ஏ.பி, கண்ணனை புத்தக விற்பனைக்கு பழக்கலாமே என்றார். சரி தோழர், அவன் ஏத்துப்பானான்னு கேட்டீங்களா? என்றார் எம்என்எஸ். ஏன், ஏத்துக்காம எங்க போகப் போறான்; சொல்லுங்க செய்வான் என்று எஸ்.ஏ.பி பதில் அளித்தார். ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் உரை யாடல் போல் அமைந்து, சிற்பிகளின் செதுக்குதல்களாக வேலைகள் அமையும். தீக்கதிரின் வைகை பதிப்பகம் மூலம் வரும் பிரசுரங்கள், சென்னைபுக்ஸ், சக்கரம் புக்ஸ் ஆக மாறி, பின் சவுத் விஷன் புத்தக நிறுவனமாக மாறிய போதும் விருதுநகர் மாவட்டக் குழு அலுவலகத்தில் இந்த நிறுவனங்களின் வெளியீடுகள் விற்பனைக்கு இருக்கும். 1991 கட்சி இடைக்குழு மாநாடுகள் துவங்கிய நேரத்தில், மதுரையில் சில புத்தக கடைகளில், எம். ராமகிருஷ்ணன், சேகர், தாமஸ், சீனிவாசன் என வாய்ப்பிருக்கும் தோழர்களுடன், என்.சி.பி.எச், மற்றும் தேசிய புத்தக டிரஸ்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் வெளியீடுகளையும் வாங்கி வருவார். அதில் எம்.என்.எஸ் படித்த புத்தகங்களை பற்றி ஒரு அறிமுகம் சொல்லி வைப்பார். அதை வைத்து நாங்கள் தோழர்களுடன் அறிமுகம் செய்வோம். அதைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் தலைவர்களின் வரலாறு, நீல கண்ட பறவையைத் தேடி, குடும்பம் சிதைகிறது,விடியுமா? போன்ற எண்ணற்ற, விருதுகள் பெற்ற புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. எல்லாம் விற்பனையும் ஆனது.
தொல்பொருள் காக்கும் பெட்டகம்
இன்றும் விருதுநகர் மாவட்டக் குழு அலுவலகத்தில் ஒரு நாற்காலி, “எஸ்” வடிவம் கொண்டது இருக்கும். அது விருதுநகர் பர்மா காலனியில் வாடகைக்கு இருந்த அலுவலகத்தில் இருந்ததாகும். சுமார் 30 ஆண்டுகள் கடந்த நிலையில் தோழர்கள் ஒன்று அல்லது இரண்டு முறை அதை சீர் செய்திருக்கலாம். ஆனால் அன்று அந்த அலுவலகத்தில் இருந்த ஒரே ஒரு மற்றும் நல்ல, புதிய நாற்காலி அது தான், எனவே அதை பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும், அது நமது நேற்றைய அடையாளம் எனச் சொல்வார். அவர் இல்லத்திலும், அவருடைய செயல் மற்றும் குணாம்சத்திலும் மேற்படி, தொல்பொருள் பாதுகாக்கும் அணுகுமுறை நீடித்தது. உணவிலும் பண்டைய பழக்க வழக்கம், நம் ஊரின் பருவநிலைக்கு ஏற்ற முறையில் நம் முன்னோர் சமைத்து சாப்பிட்டு வந்த விவரங்களைக் கூறுவார். அவை மார்க்சீயம் சொல்லும், பொருள் முதல் வாத கண்ணோட்டத்தில் இருக்கும். மதுரையில் கட்சியின் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு சென்று திரும்பும் போது, உணவு கடைகளுக்கு அழைத்து செல்வார். புறப்படும் முன் உனக்கு பிடிக்குமாப்பா? என்ற கேள்வி கண்டிப்பாக இருக்கும். ஒவ்வொரு செயலிலும் உடன் இருப்போரின் உணர்வு களைக் கணக்கில் கொண்டு செயல்படுவார். அவரின் வயது, அல்லது அனுபவம் போன்றவற்றை விட, உடன் இருப்போர் இளையவர் தானே என்ற அணுகுமுறையை ஒரு போதும் தோழர். எம்.என்.எஸ். சிடம் கண்டதில்லை.
அமைப்பின் மீதான பற்றுதலும், உருக்கு போன்ற அணுகுமுறையும்
1994 துவக்கம் முதல் மாணவர் அரங்கத்தின் மாநில மைய ஊழியராக நான் செயல்பட்ட காரணத்தால், அவரை எப்போதாவது சந்திக்கும் நிலை தான் இருந்தது. செல்போன் வந்த பின் சற்று கூடுதலாக உரையாடி இருக்கலாம். எங்கு சென்றாலும், எவ்வளவு உரிமை எடுத்து பேசினா லும், எந்த தனிப்பட்ட தகவல் பரிமாற்றமும் அமைப்பு சார்ந்த முடிவுகளில் இருக்காது. ஆனால் தோழர்களுக்கு உரமேற்றும் செய்திகள் இருக்கும். கட்சி மாவட்டக் குழுவின் இடைக்கால அமைப்பு பரிசீலனைக் கூட்டம் 1993 டிசம்பரில் இராஜபாளையம் நகரில் நடந்த போது, தோழர். எஸ்.ஏ.பி, 37 வயது கொண்ட இளம்தோழராக இருந்த தோழர் எம். என்.எஸ்.வெங்கட்ட ராமனை மாவட்ட செயலாளராக முன் மொழிந்தார். எம்.என்.எஸ் செய்யும் திட்டமிடல், அமலாக்கம், அனைத்து தோழர்களுக்கும் தெரியும் என்பதால், முழு ஏற்பு இருந்தது. அதை அவர் மாவட்ட செயலாளர் ஆன பின் பல நடவடிக்கைகளில் கூடுதலாக வெளிப்படுத்தினார். அவர் விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளராக இருந்த போது, அச்சன் கோவில், பம்பை மற்றும் அழகர் அணைத் திட்டம் முன்மொழியப்பட்டு அமலாகாமல் இருந்ததை கவனப்படுத்தி, தொடர் போராட்டங்கள் நடந்தது. அதன் மூலம் சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பயன்படும் என்ற விவரங்களுடன் பணக்கார விவசாயிகளையும் அணிதிரட்டி போராட்டங்கள் நடந்தது. அதேபோல் கரும்பு விவசாயிகளுக்கு தனி சங்கம் இல்லாத காலம். அப்போது வாசுதேவநல்லூரில் இருந்த தரணி சர்க்கரை ஆலைக்கு கரும்பு விநியோகம் செய்யும், கரும்பு விவசாயிகளைத் திரட்டிய அனுபவம் அவருக்கு இருந்தது. பகலில் ஆளுக்கு ஒரு திசையில் பயணித்தாலும், இரவில் கூடு தங்கும் பறவைகளைப் போல், மாவட்டக் குழு அலுவலகத்தில் தங்கும் போது, அவரவர் சென்ற நிகழ்வுகளை பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பின் காரணமாக அந்தச் செய்திகள் நினைவில் நிற்கிறது.
1994 மார்ச்சில் அலுவலகத் திறப்பு விழாவிற்கு தோழர். இ.கே.நாயனார் அழைக்கப்பட்டிருந்தார். மாவட்டக் குழுவில் இருந்து திருவனந்தபுரம் சென்று, இ.கே.நாயனாரை, யார் அழைத்து வருவது என்ற விவாதம் நடந்த போது, இருவரும் ஒருசேர கண்ணன் போய் வரட்டும் என்றனர். ஊழியர்களுக்கு வேலைகளை துணிந்து வழங்கும் குணம் தோழர்கள் எஸ்.ஏ.பி, மற்றும் எம்.என்.எஸ் இருவரிடமும் இருந்தது. அதை அப்படியே விட்டுவிடாமல், கண்காணித்து ஊக்கப்படுத்துவது அல்லது சீர்செய்வது என்பதையும் காணமுடியும். திடீர் போராட்டங்கள், விடுதியில் இருந்து வெளியேற்றப் படுதல், கல்லூரியில் இருந்து தற்காலிக பணிநீக்கம் செய்தல் போன்றவை, அந்த சமயத்தில் ஏராளம் நடை பெற்றது. அந்த இளம் தோழர்கள் அலுவலகத்தில் தங்கு வதற்கு அனுமதிக்கப்படுவதுடன், வழிகாட்டும் வாய்ப்பும் கிடைக்கும். இது போல் பல தோழர்கள் அந்த பாசறையில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். 1992ல் காரியாபட்டி ராமுசீதா பாலிடெக்னிக் மாணவர்கள் நள்ளிரவிலும்தாளாளரை முற்றுகையிட்டு நடத்திய போராட்டம் மறக்க முடியாதது. மாணவிகளும் அந்த நேரத்தில் போராட்டக் களத்தில் இருந்தனர். அந்த தாளாளர் எனக்கு எம்.என்.எஸ் ஐத் தெரியும் என்றார். அதிகாலை விருதுநகர் அலுவலகம் வந்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம். இனி எம்.என்.எஸ் இல்லாத பாசறையில் உளிகளும், கைகளுமாக அவர் பயிற்றுவித்த மார்க்சியம் வழி காட்டும். அவரது நினைவுகள் இந்த புரட்சிகர இயக்கத்தில் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சும் கலங்கரை விளக்காக இருக்கும்.