states

img

கோடியக்கரை சரணாலயத்தில் கூட்டம் கூட்டமாக பறவைகள்

வேதாரண்யம், நவ.19- நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்கரை வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயத்திற்கு யூரேசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வரும் பல்வேறு வகையான நீர்ப் பறவைகளின் கூட்டம் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. கோடியக்கரை வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம் ஒரு வெப்பமண்டல வறண்ட பசுமையான காடு ஆகும். இங்கு. ஏராளமான புலம்பெயர்ந்த பறவை இனங்கள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சரணாலயத்திற்கு வருகை தருகின்றன. மணல் திட்டுகள் மற்றும் மண் அடுக்குகள் அதிக அளவில் உள்ளதே இதற்குக் காரணமாகும்.  வடகிழக்குப் பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து கோடியக்கரை வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயத்தில் நிலவும் சூழல் மட்டுமல்ல; கடலோர நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதும் பறவைகளுக்கு போதுமான உணவளிக்கும் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது என்கிறார் வேதாரண்யம் பகுதி வனச் சரகர் பி.அயூப் கான்.  தீவனத்திற்காகவும், லார்வாக்கள், பூச்சிகள், மீன்கள், நண்டுகள் மற்றும் மண் அடுக்குகளில் உள்ள பைட்டோபிளாங்க்டன்களை (நுண்ணிய கடல் பாசிகள்) உண்பதற்கு மட்டுமே  பறவைகள் இங்கு வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பூநாரை (கிரேட்டர் ஃபிளமிங்கோ), காஸ்பியன் டெர்ன் (ஹைட்ரோப்ரோன்), லிட்டில் டெர்ன் (நீளச்சிறகு கடற்பறவை), குல்-பில்ட் டெர்ன் (பருத்த அலகு ஆலா), விஸ்கர்ட் டெர்ன் (மீசை ஆலா),  கர்லேவ் சாண்ட்பைப்பர் (வளைமூக்கு உள்ளான்) உட்பட யூரேசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து அறுபது வகையான பறவைகள் சரணாலயத்திற்கு வந்துள்ளன. இமயமலை, மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் இலங்கையிலிருந்து பாரடைஸ் ஃப்ளைகேட்சர் (இந்திய அரசவால் ஈபிடிப்பான்) மற்றும் இந்திய கோல்டன் ஓரியோல், (இந்தியத் தங்க மாங்குயில்) உள்ளிட்ட பறவை இனங்களும் வந்துள்ளன. உள்ளூர் பறவை இனங்களான பெயிண்டட் ஸ்டோர்க் (மஞ்சள் மூக்கு நாரை), பெலிகன்ஸ் (கூழைக்கடா) மற்றும் கிரே ஹெரான்கள் (சாம்பல் நாரைகள்) போன்றவையும் உள்ளன. அண்மையில், புலம்பெயர்ந்த பறவை இனமான நண்டு தின்னியின் (கிராப்பேளவர்)  இனப்பெருக்க தடயங்கள், கோடியக்கரைக்கு அருகிலுள்ள மன்னவரன் தீவில் முதன்முறையாகக் காணப்பட்டன. தற்போது நிலவும் வானிலையை கருத்தில் கொண்டு, அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர் பறவை இனங்கள் சரணாலயத்திற்கு வர வாய்ப்புள்ளது.