திருச்சிராப்பள்ளி: திருச்சி பாரதிதாசன் கல்லூரி கல்வி, மற்றும் தேர்வு கட்டணங்கள் உயர்வு தற்போது கிடையாது, பழைய கட்டணமே தொடரும் என பல்கலைக்கழக துணைவேந்தர் ம. செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வு மற்றும் கல்விக் கட்ட ணங்கள் உயர்த்தப் படுவதாகவும், உயர்த்தப்பட்ட கட்டண விகிதம் 2020 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக, பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் சீனிவாச ராகவன், பல்கலைக் கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரி முதல்வர்களுக்கு கடந்த மார்ச் 28 ஆம் தேதி கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். கட்டண உயர்வு, சுமார் 200 மடங்கு வரை இருந்ததால் மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் ம. செல்வம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து மேலும் கூறியது :
மாணவர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வு மற்றும் கல்விக் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படு கிறது. ஏப்ரல் 2022 பல்கலைக்கழக தேர்வுக்கு முந்தைய தேர்வின் போது செலுத்திய பழைய கட்டணத்தையே மாணவர்கள் செலுத்தினால் போதும். எனினும், தேர்வு கட்டணம் உள்ளிட்ட ஒரு சில கட்டணத்தை மட்டும் குறைக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வரு கின்றன. இதுகுறித்து மறுஆய்வு செய்யப்பட்டு கட்டண நிர்ணய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். நாகப்பட்டிணத்தில் அண்மையில் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற ஒரு கல்லூரி ஒன்று, தன்னாட்சி பெற்ற ஆண்டுமுதல் அங்கு பயிலும் அனைத்து மாணவர்களும் தன்னாட்சி முறைக்குள் கொண்டு வரப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஒரு கல்லூரி, தன்னாட்சி அந்தஸ்து பெறும் ஆண்டிலிருந்தே, அக்கல்லூரியில் சேரும் மாணவர்கள் தன்னாட்சி முறைக் குள் கொண்டு வரப்படுவர். தன்னாட்சி அந்தஸ்து பெறும் கல்வியாண்டில் 2 மற்றும் 3 ஆம் ஆண்டு பயிலும் மாணவர்கள் பல்கலைக்கழக இணைவு பெற்ற மாணவர்களாகத்தான் கருதப்படுவர். இது குறித்து அந்த கல்லூரிக்கு அறிவுறுத்தப்பட்டுவிட்டது. அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் வழங்கப்பட்டுவிட்டது. மார்ச் மாத ஊதியம் உயர்த்தப்பட்ட ஊதியமாக வழங்கப்படும்.
தனியார் மற்றும் உதவிபெறும் கல்லூரிகள் பல்கலைக்கழகத்துக்கு செலுத்தவேண்டிய கட்டணத்தை இணையம் (ஆன்லைன்) மூலம் செலுத்துவதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் இதுவரை வரவில்லை. இந்த முறையில் உள்ள சிக்கல்கள் களைய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். பேட்டியின் போது பதிவாளர் கணேசன் உடனிருந்தார்.